"ஒரு வாரம்தான் டைம்.." மதுரையில் மீண்டும் நிறுவப்படும் மீன்கள் சிலை.. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
மதுரை: மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே இருந்த மீன்கள் சிலை அகற்றப்பட்ட நிலையில், அந்த சிலையை மீண்டும் நிறுவுவது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் மதுரைக்கு வரலாற்று ரீதியாக மிக முக்கிய இடம் இருக்கிறது.. மதுரையில் மீனாட்சி கோவில், மாரியம்மன் கோவில் தெப்பக்குளம், திருமலை நாயக்கர் மஹால் எனப் பல புகழ்பெற்ற இடங்கள் இருக்கிறது.

இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்டு மதுரை நகரில் பாண்டிய மன்னர்களின் நினைவாக 3 மீன்களின் வெண்கலச் சிலை கடந்த 1999ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 15 அடி உயரம் கொண்ட இந்த சிலை 3 டன் எடை கொண்டதாக இருந்தது.
மீன்கள் சிலை: மதுரை ரயில் நிலையத்தின் முன்பு அமைக்கப்பட்ட இந்த சிலை, மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகவே இருந்து வந்தது. இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ரயில் நிலைய பராமரிப்பு மற்றும் விரிவாக்க பணிகளுக்காக இந்த மீன்கள் சிலை அகற்றப்பட்டது. இதற்கு அப்போதே மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பணிகள் முடிந்ததும் மீண்டும் அதே இடத்தில் மீன்கள் சிலை நிறுவப்படும் என மதுரை மாநகராட்சி சார்பில் கூறப்பட்டது.
இருப்பினும், பராமரிப்பு பணிகள் முடிந்தும் மீன்கள் சிலை மீண்டும் நிறுவப்படவில்லை. இது தொடர்பாக மீண்டும் மீன்கள் சிலையை நிறுவ வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் பஸ் ஸ்டாப் காரணமாக அதே இடத்தில் மீண்டும் மீன்கள் சிலை அமைக்க வாய்ப்பில்லை என ரயில்வே சார்பில் கூறப்பட்டது. இதையடுத்து மீன்கள் சிலையை வைக்க வேறு இடங்கள் தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டது.
சென்னை ஐகோர்ட் உத்தரவு: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட் மதுரை கிளை சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது மீன் சிலையைப் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில் நிறுவ மதுரை மாநகராட்சிக்குச் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும், மீன்கள் சிலையை ஒரு வாரத்தில் மதுரை மாநகராட்சியிடம் ஒப்படைக்க ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலையை நிறுவ இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். அப்போது ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மீன் சிலை பத்திரமாக இருப்பதாகவும் எப்போது வேண்டுமானாலும் ஒப்படைக்கத் தயார் என்றும் தெரிவித்தனர். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில் மீன்கள் சிலையை நிறுவ உத்தரவிட்டனர்.
எங்கே நிறுவப்படும்: இந்த மீன்கள் சிலையை உரிய இடத்தில் நிறுவ மதுரை மாநகராட்சிக்கு முழு பொறுப்பு என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மதுரை மக்களின் விருப்பம் மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மீன்கள் சிலையை நிறுவ வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த மீன்கள் சிலை பெரியார் நிலையம் அருகே உள்ள பிளாசா என்ற இடத்தில் வைக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications