"தமிழக அரசுக்கு துணிவு உள்ளதா?" முக்கிய அரசாணையை ரத்து செய்த ஐகோர்ட் மதுரை அமர்வு!
மதுரை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பின்புலத் தகவல்களைச் சேகரிக்க வேண்டும் எனத் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதற்கிடையே இந்த அறிவிப்பாணைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதனை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்துள்ளது. மேலும், வழக்கு விசாரணையில் தமிழக அரசிடம் சில காட்டமான கேள்விகளையும் முன்வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கப் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்த நிலையில், அதைத் தக்கவைக்கத் தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே அரசு பள்ளிகளுக்குத் தமிழக அரசு ஒரு அறிவிப்பாணையை வெளியிட்டு இருந்தது. அதில் அரசுப் பள்ளிகளில் 9 முதல் +2 வரை படிக்கும் மாணவர்களின் பின்புலத் தகவல்களைச் சேகரிக்க வேண்டும் என்ற தெரிவிக்கப்பட்டு இருந்தது. தமிழக அரசின் இந்த அறிவிப்பாணையை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த அமீர் ஆலம் என்பவர் ஐகோர்ட் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பின்புல தகவல்களைச் சேகரிப்பதன் மூலம் மாணவர்கள் மீது ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளதா? பெற்றோர் யாரேனும் சிறையில் உள்ளனரா? அவர்கள் அகதிகளா? என்று விவரங்களைச் சேகரிக்க முயற்சி நடக்கிறது" என்ற வாதத்தை முன்வைத்தார்.
குறிப்பிட்ட பிரச்சினைகளால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால்.. அவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே இந்தத் தகவல்களைச் சேகரிப்பதாக அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அரசு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு கூறும் 'சிறப்புக் கவனம்' என்று எதைச் சொல்கிறது என்று குறிப்பிடவில்லை என்றனர்.
மாணவர்களின் தகவல்கள் உணர்வுப்பூர்வமானவை என்றும் அதைச் சேகரிப்பது மாணவர்களின் உரிமையைப் பாதிக்கும் செயல் என்றும் தெரிவித்தனர். மேலும், இந்தத் தகவல்களைச் சேகரிப்பது, இதுபோன்ற பின்னணி கொண்ட மாணவர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தனர். தனியார் பள்ளிகளில் இது போன்று கேட்கும் துணிவு இருக்கிறதா? என்றும் காட்டமான கேள்விகளை எழுப்பினர்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பாணை உச்ச நீதிமன்றக் கட்டுப்பாடுகளை மீறும் வகையில் இருப்பதாகக் கூறிய நீதிபதிகள், இந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் வேறு எதாவது நடவடிக்கை எடுத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்.












Click it and Unblock the Notifications