திருப்பரங்குன்றம் தீபத்தூணில் செருப்பு அணிந்து ஆய்வு செய்த தொல்லியல்துறை? இந்து மக்கள் கட்சி கண்டனம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் செருப்பு அணிந்த காலுடன் ஆய்வு செய்ததாக இந்து மக்கள் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. அங்கிருப்பது தீபத்தூண் அல்ல, எல்லைக் கல்தான் என அறிவிக்க சதி வேலையில் ஈடுபட்டு அதற்காக தொல்லியல் துறை அதிகாரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளது என இந்து மக்கள் கட்சி விமர்சித்துள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்த ராம.ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

ஆனால், திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம், அந்த இடத்தில் தீபம் ஏற்றவில்லை. மனுதாரர் ராம.ரவிக்குமார் மற்றும் 10 பேர் அடங்கிய குழுவினர் மலைக்குச் சென்று தீபம் ஏற்ற போலீசார் அனுமதி மறுத்தனர். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்தது.
உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. உத்தரவை அமல்படுத்தாததால் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது. அதேநேரம், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு விரைவி்ல் விசாரணைக்கு வர உள்ளது.
இதற்கிடையே, மலை உச்சியில் உள்ள தூண், கார்த்திகை தீபத் தூண்தான் என்று ஒரு தரப்பினரும், இல்லை அது நில அளவீட்டுக்கல் என்று மற்றொரு தரப்பினரும் தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தமிழக அரசின் தொல்லியல் துறை துணை இயக்குநர் யதீஷ்குமார் தலைமையில், உதவி இயக்குநர் லோகநாதன் மற்றும் தொல்லியல் அலுவலர்கள் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
காலை 8 மணியிலிருந்து பகல் 12 மணி வரை தீபத் தூணின் முழு பகுதியை ஆய்வு செய்து, அதில் உள்ள விவரங்களை நகல் எடுத்தனர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் தீபத்தூணை தமிழக தொல்லியல் அதிகாரிகள் ஆய்வு செய்ததில் சந்தேகம் இருப்பதாக மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலைகண்ணன் கூறியுள்ளார்.
தொல்லியல் துறையினரின் ஆய்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன், தமிழக அரசு தன்னுடைய கட்டுபாட்டில் இருக்கும் தமிழக தொல்லியல் துறையை இத்தனை நாள் கழித்து என்ன காரணத்திற்கு ஆய்வு செய்ய அனுப்பியது? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் உயர் நீதிமன்ற அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு டிசம்பர் 12-ல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், திருப்பங்குன்றம் மலை உச்சியில் இருப்பது எல்லைக் கல்லா? தீபத்தூணா? என ஆய்வு செய்ய தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரிகள் திருப்பரங்குன்றம் மலையில் இன்று ஆய்வு செய்துள்ளனர்.
இந்துக்கள் புனிதமாக கருதும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணுக்கு அதிகாரிகள் செருப்பு அணிந்த காலுடன் சென்றுள்ளனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூண் இருந்ததற்கான பல்வேறு ஆதாரங்கள், ஆவணங்கள் உள்ளன. இவற்றின் அடிப்படையில்தான் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது.
திமுக அரசு நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றாமல், அங்கிருப்பது தீபத்தூண் அல்ல, எல்லைக் கல்தான் என அறிவிக்க சதி வேலையில் ஈடுபட்டு அதற்காக தொல்லியல் துறை அதிகாரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளது. இந்த ஆய்வில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.
இந்த ஆய்வுக்கு உயர் நீதிமன்றத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் அனுமதி பெற்றுள்ளார்களா? தீர்ப்புக்கு முன்பு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபத்தூணை நேரில் ஆய்வு செய்துள்ளார். அதன் பிறகு தொல்லியல் அதிகாரிகள் ஏன் ஆய்வு செய்ய வேண்டும். தமிழக தொல்லியல் துறையின் செயல்பாடு நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். இதனால் தொல்லியல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications