தொட்டுப்பார்.. திமிறி பாய்ந்த திருமாவளவன் காளை! தங்கக்காசு பரிசளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!
மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காளையை யாரும் தொட்டுக்கூட பார்க்க முடியாத வகையில் அது சீறிப் பாய்ந்து வெற்றி பெற்றுள்ளது.
காளையின் உரிமையாளர் திருமாவளவன் எம்.பி.க்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கிய தங்கக்காசு பரிசளிக்கப்படுவதாக ஜல்லிக்கட்டு களத்தில் அறிவிக்கப்பட்டது. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அமைச்சர் மூர்த்தி இன்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.

இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டு ரசிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் மதுரையில் குவிந்து வருகிறார்கள். மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இன்று 1,000 காளைகள் அவிழ்த்து விடப்படும் எனத் தெரிகிறது.. இவற்றை அடக்குவதற்காக 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் தங்கள் பெயர்களை முறைப்படி பதிவு செய்துள்ளனர்.
முதல் சுற்று முடிந்து இரண்டாவது சுற்றில் விசிக தலைவர் திருமாவளவன் காளை அவிழ்த்துவிடப்பட்டது. காளை பிடிபடாமல் சீறிப்பாய்ந்ததால் ''அடடா மயிலக்காளை, மச்சக்காளை.. தொட்டுப்பார்.. திருமாவளவன் மாடு.. மாடு வெற்றிபெற்றது'' என வர்ணனையாளர் அறிவித்தார். திருமாவளவன் பெயரில் காளை அவிழ்த்துவிடப்பட்டதை போலவே தமிழக அரசியல் பிரமுகர்கள் பலரது பெயரிலும் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன.
இதனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பரபரப்புக்கு பஞ்சமின்றி காட்சியளிக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும் பரிசாக வழங்கப்படுகிறது. அதேபோல் சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சார்பில் 2 பசுமாடுகள் பரிசளிக்கப்படுகிறது.
இதனால் காளைகளை அடக்கி பரிசுகளை தட்டிச்செல்ல வேண்டும் என காளையர்கள் ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் களத்தில் இறங்கி வீரத்தை பறைசாற்றி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications