ஓ.பி.எஸ். காரை முற்றுகையிட்ட மக்கள்... குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்... பரபரத்த உசிலம்பட்டி..!
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் காரை அப்பகுதி மக்கள் சிலர் முற்றுகையிட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விவசாயி தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சகாதேவன் என்ற விவசாயி 4 4 நாட்களுக்கு முன்பு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். முத்துவீரன் என்பவரிடமிருந்து வீடு வாங்கிய விவகாரத்தில் சகாதேவனை சிலர் மிரட்டியதாகவும் அதன் காரணமாகவே தற்கொலை முடிவை அவர் நாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சகாதேவன் உயிரிழந்து 4 நாட்கள் ஆகியும் உரிய நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் மற்றும் சகாதேவனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்நேரம் பார்த்து மதுரையிலிருந்து சென்ற ஓ.பி.எஸ். கார் அங்கு வந்திருக்கிறது.
இதையடுத்து ஓ.பி.எஸ். காரை முற்றுகையிட்டு நடந்த விவரத்தை கூறி நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள் என ஓ.பி.எஸ். பாதுகாப்பு அதிகாரிகள் எடுத்துக்கூறியும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை.
இதனால் ஓ.பி.எஸ். காரை மறித்து போராட்டம் நடத்தியவர்கள் காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இந்த நிகழ்வு உசிலம்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே விவசாயி சகாதேவனை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களை தீவிரப்படுத்த நேரிடும் என அவரது உறவினர்களும், ஊர் மக்களும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications