முடிஞ்சா தொட்டுப் பாரு! நின்று விளையாடிய முதலமைச்சர் ஸ்டாலின் காளை! பாலமேடு ஜல்லிக்கட்டு ருசிகரம்!
மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காளை களத்தில் நின்று விளையாடியதோடு, தனது பக்கத்தில் ஒருவரை கூட விடாமல் தெறிக்கவிட்டிருக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலினின் காளையை அடக்கி கவனம் ஈர்த்துவிடலாம் என எண்ணிய பலரும் இறுதியில் ஏமாற்றமே அடைந்தனர்.
முடிஞ்சா புடிச்சுப் பாரு என வீரர்களிடம் ஜல்லிக்கட்டு வர்ணனையாளர் கூறிய நிலையில் ஸ்டாலினின் காளை காற்றாய் சீறிப்பாய்ந்தது.
பாலமேடு ஜல்லிக்கட்டு
மதுரை மாவட்டம் பாலமேட்டில் காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காட்டிலும் பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிகமான பரிசுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பாலமேடு ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்ததோடு காலை முதலே அங்கிருந்து நேரில் கண்டு ரசித்து வருகிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின்
இந்நிலையில் நண்பகல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காளை என்ற பெயரில் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்ட மாடு களத்தில் நின்று விளையாடியது. அதனை அடக்கினால் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்த்துவிடலாம் என்பதோடு பரிசுகளையும் அள்ளிக்குவிக்கலாம் என்ற எண்ணத்தோடு பலரும் காளையை அடக்க முயற்சித்தனர். ஆனால் அந்தக் காளை சுற்றி சுற்றி வீரர்களை தெறிக்கவிட்டதோடு, காற்றாய் சீறிப்பாய்ந்தது.
தொட முடியவில்லை
இதனால் முதலமைச்சர் ஸ்டாலினின் காளையை யாராலும் தொட்டுக்கூட பார்க்கமுடியவில்லை. இதனிடையே நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அவிழ்த்துவிடப்பட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் காளையையும் யாராலும் அடக்கமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் காளையும் வீரர்களிடம் சிக்காமல் சீறிப்பாய்ந்தது கவனிக்கத்தக்கது.
கார் பரிசு
நேற்று அவனியாபுரத்தில் கொடுக்கப்பட்டது போலவே இன்றும் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு கார் ஒன்றை பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் பரிசாக கொடுக்கிறார் அமைச்சர் மூர்த்தி. காரை பரிசாக வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் காளையர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு காளைகளை அடக்கி வருகின்றனர்.