"மிரட்டுறாங்க".. திமுகவில் வரும் சில தகவல்கள் வேதனையை தருகிறது.. அமைச்சர் பிடிஆர் பரபரப்பு பேச்சு!
மதுரை: திமுகவில் சில நாட்களாக வரும் தகவல்கள் வேதனை தருகிறது என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூட்டம் ஒன்றில் பேசி இருக்கிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் திமுகவின் 15வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழுவில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விஷயங்களை பற்றி பேசினார். சில திமுக அமைச்சர்களின் சர்ச்சை பேச்சு, அதற்கு வந்த எதிர்மறை விமர்சனங்கள் பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
பொது இடங்களில் சிலர் நடந்து கொண்டதன் மூலம் திமுக பழிக்கு ஆளானது. நீங்கள் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்; கண்ணியமான சொற்களை பயன்படுத்துங்க, என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து அமைச்சர் பொன்முடி "ஓசி" பேருந்து என்று தான் கூறிய கருத்திற்கு வருத்தமும் தெரிவித்தார்,
இந்த நிலையில்தான் சில நாட்களாக வரும் தகவல்கள் வேதனை தருகிறது என்று அமைச்சர் பிடிஆர் தனது பேச்சில் குறிப்பிட்டு இருந்தார். மதுரையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பாக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், திமுகவில் சில நாட்களாக வரும் தகவல்கள் வேதனை தருகிறது.
சிலர் கட்சி நிகழ்வுகளை தானும் புறக்கணித்து, மற்றவர்களையும் அழைத்து புறக்கணிக்க கூறி மிரட்டுவதாக தகவல் கிடைத்துள்ளது. எப்போதும்.. தயவு செய்து குட்டி மிருகங்களாக ஆகாதீர்கள். இன்று நான் சொல்கிறேன்.. நான் அரசியலுக்கு வந்ததில் இருந்து.. பொதுவாழ்க்கையை விட்டுவிட்டு வெளியே போகுவது வரை யாரையும் நான் கட்டுப்படுத்த மாட்டேன். அவரை போய் பார்க்காதே.. அவருடன் பேசாதே.. இவருடன் பேசாதே.. அந்த கூட்டத்தில் கலந்து கொள் என்று கூற மாட்டேன். என்றும் நான் அப்படி யாரிடமும் சொல்ல மாட்டேன்.
அவர் பெயரை கட் அவுட்டில் போடாதே. அவரின் படத்தை கட் அவுட்டில் போடாதே என்று சொல்லவே மாட்டேன். அப்படி எல்லாம் நான் என் வாழ்க்கையில் சொல்லவே மாட்டேன். நான் பெரிய மனிதன். அப்படி எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. அப்படியே எனக்காவும் நான் பேச மாட்டேன். என் படத்தை போடு, என் பெயரை போடு என்று சொல்ல மாட்டேன்.
நான் பெரிய மனிதன். எனக்கு அது அவசியம் இல்லை. ஐடி விங் பொறுப்பை என் தலைவர் எனக்கு வழங்கினார். அப்போது ஐடி விங் பேப்பரில் கூட இல்லை. அதை பெரிதாக்கி, 4 வருடங்களில் 1 நாள் கூட விடாமல் உழைத்தேன். அந்த நாட்களில் ஒரு நாள் கூட எனக்கு போஸ்டர் ஒட்டு. ஏர்போர்ட்டில் வந்து எனக்காக கோஷம் எழுப்பு என்று கேட்டது இல்லை. எனக்கு போஸ்டர் ஒட்ட சொல்லியதே இல்லை
எனக்காக ஜால்ரா அடி என்று யாரிடமும் நான் அப்போது சொல்லியதே இல்லை. நான் பெரிய மனிதன் . நான் அப்படி எல்லாம் ஒரு போதும் என் தொண்டர்களிடம் சொல்லவே மாட்டேன். அது மிகவும் தவறு. சிலர் கட்சி நிகழ்வுகளை தானும் புறக்கணித்து, மற்றவர்களையும் அழைத்து புறக்கணிக்க கூறி மிரட்டுவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் எனக்கு வேதனை அளிக்கிறது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டு உள்ளார்.