தமிழகத்தில் முதல்முறை! கேஸ் சிலிண்டர் பதுக்கிய 2 பேர்.. குண்டர் பாய்ந்தது! அதிரடி கைது!
மதுரை: ஈரான் போர் காரணமாக, எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில், மதுரையில் கேஸ் சிலிண்டர்களை பதுக்கியதாக 2 பேர் அதிரடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் பதுக்கியதற்காக குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது இதுவே முதல்முறையாகும்.
சிலிண்டர் பதுக்கலை தடுக்க எஸ்மா சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மதுரையில் சில பகுதிகளில், உணவுப்பொருட்கள் கடத்தல் மற்றும் மானிய விலை எல்பிஜி சிலிண்டர் பதுக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினர், மதுரை கோவில்பாப்பாகுடி ஆத்தாளை பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் வீட்டின் அருகே, காலியிடத்தில் சோதனை மேற்கொண்டதில், கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 மானிய விலை சிலிண்டர்கள் மற்றும் 109 வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் என மொத்தம் 209 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோன்று, கோவில்பாப்பாகுடி ஆனந்தம் நகரை சேர்ந்த மதன்குமார் (27) என்பரின் வீட்டருகே சோதனை செய்தபோது, சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 63 மானிய விலை சிலிண்டர்கள் மற்றும் 126 வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் உட்பட மொத்தம் 189 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இரு இடங்களிலும் 398 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அத்தியாவசியப் 'எஸ்மா' சட்டத்தின் கீழ் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து, இருவர் மீதும் மானிய விலை சிலிண்டர் பதுக்கல் தொடர்பாக கள்ளச்சந்தை தடுப்புக் காவல் (குண்டர்) சட்டத்தின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளது. தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக, சிலிண்டர் பதுக்களை தடுக்க எஸ்மா சட்டத்தின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குண்டர் சட்டம் தொடரபான உத்தரவை, மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் கொடுத்திருந்தார்.
மானிய விலை சிலிண்டர் பதுக்கலில் ஈடுபடுவோர் மீது, கடுமையான சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை மதுரை மண்டலத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications