அன்பில் மகேஷும் என் பிள்ளை மாதிரி தான்! ஆரத்தழுவி வரவேற்ற மு.க.அழகிரி! நெகிழ்ச்சிகர நிகழ்வு!
மதுரை: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் தனது பிள்ளை மாதிரி தான் என்று கூறி அவரை ஆரத்தழுவி வரவேற்றார் மு.க.அழகிரி.
உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பா மு.க.அழகிரியை மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு சந்தித்த போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உடன் சென்றிருந்தார்.
அப்போது அன்பில் மகேஸை பார்த்தவுடன் அவரது தோளில் உரிமையாக கை போட்டு ஆரத்தழுவி வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் மு.க.அழகிரி.

மகிழ்ச்சி பொங்கல்
இந்த பொங்கல் மு.க.அழகிரிக்கு மகிழ்ச்சி பொங்கலாக அமைந்திருப்பதால் அவரது ஆதரவாளர்கள் இன்று முதல் மீண்டும் உற்சாகமாக வலம் வரத் தொடங்கியுள்ளார்கள். உதயநிதி ஸ்டாலின் மு.க.அழகிரி சந்திப்பை பொறுத்தவரை தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. மதுரை மாவட்ட அமைச்சர்களான மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்டச் செயலாளர்கள் கோ.தளபதி, மணிமாறன் உட்பட யாரும் உதயநிதியுடன் மு.க.அழகிரி இல்லத்துக்கு செல்லவில்லை.

வீட்டில் விளையாடிய பிள்ளை
ஆனால் அதேவேளையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது நண்பரும் அமைச்சருமான உதயநிதியுடன் மு.க.அழகிரி இல்லத்துக்கு சென்றிருந்தார். முதலில் உதயநிதியை வரவேற்பதில் பிசியாக இருந்த மு.க.அழகிரி, அதன் பிறகு அன்பில் மகேஸை பார்த்தவுடன் மிகவும் உரிமையாக அவரது தோளில் கை போட்டு கட்டியணைத்து வீட்டிற்குள் வரவேற்று அழைத்துச் சென்றார். இந்தச் சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்த மு.க.அழகிரி, சின்ன வயதில் எனது வீட்டில் விளையாடிய பிள்ளைகள் எல்லாம் இன்று அமைச்சர்களாக இருப்பது தனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருவதாக கூறினார்.

ஆர்வமுடன் போட்டோ
அப்போது அன்பில் மகேஷின் கையை பற்றி இவரும் என் பிள்ளை மாதிரி தான், மந்திரி ஆன பிறகு இப்பத்தான் பார்க்க வர்றாரு என கலாய்த்தார். இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது. இதனிடையே அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ் ஆகிய இருவருடனும் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் பலரும் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்தப் பொங்கலில் இப்படியொரு சந்திப்பு நிகழும் என்பதை எதிர்பார்க்காத அவர்கள் மீண்டும் பழைய உற்சாகத்துக்கு வந்துள்ளனர்.

துரை தயாநிதி
இந்தச் சந்திப்பின் போது மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மதுரை இல்லத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது திட்டமிடப்படாமல் நடைபெற்ற மரியாதை நிமித்தமான திடீர் நிகழ்வு என அமைச்சர் உதயநிதி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications