கட்டுமான பொருட்களான கிராவல், ஜல்லி, எம்.சாண்ட் விலை விவகாரத்தில் மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
மதுரை: கட்டுமான மூலப்பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் கிராவல், ஜல்லி, எம்.சாண்ட் விலையை முறைப்படுத்த வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் பெரிய கிளுவச்சி கிராமத்தை சேர்ந்த கந்தசாமி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். கட்டுமான பொருட்களின் விலையை முறைப்படுத்த மாநில அளவில் குழு அமைக்கவும், அவற்றின் விலை உயர்வு குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்றும் கோரினார். இந்த வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கட்டுமான தொழிலில் மூலப்பொருட்களின் விலை ஒவ்வொரு ஆண்டும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த ஜனவரி முதல் தேதியில் இருந்து முதல் கல்குவாரிகளில் தயாராகும் ஜல்லிக்கற்கள், ஜி.எஸ்.பி. ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட், டஸ்ட் போன்றவற்றின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டது. இந்த விலையேற்றத்தால் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளோர் கவலையில் இருக்கிறார்கள். இது ஒருபுறம் எனில் 2020ல் ஒரு கொத்தனாரின் ஒரு நாள் சம்பளம் ரூபாய் 900 வரை இருந்தது. ஆனால் இப்போது 1200 ரூபாயை தாண்டிவிட்டது.

அதே போல, வீடு கட்டுதல் சார்ந்த அனைத்து உழைப்பூதியங்களும் அதிகரித்துவிட்டது.. லேபர் கூலிக்கு மிகப்பெரிய அளவில் பணம் கட்ட வேண்டியதிருக்கிறது. மறுபுறம் கட்டுமான பொருட்களின் விலையும் அதிகமாக உள்ளது. அதேபோல் கட்டுமான பொருட்களில் பெரும்பாலும் நகரங்களில்தான் வாங்கமுடியும். எனவே, ஊரகப் பகுதிகளில் வீடு கட்டுபவர்கள் இவற்றை கொண்டு செல்வதற்காக கூடுதலாக போக்குவரத்து செலவினையும் ஏற்க வேண்டும் என்கிற நிலை உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டுமான பொருட்களின் விலை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்துவிட்டது. இந்நிலையில் கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த இவற்றிற்கான விலை நிர்ணயக் குழு ஒன்றை அரசு அமைக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் பெரிய கிளுவச்சி கிராமத்தை சேர்ந்த கந்தசாமி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், தமிழ்நாடு அரசின் கட்டுமான பணிகள் தொடர்பான டெண்டரில் தொடர்ச்சியாக நான் பங்கேற்று வருகிறேன். சமீபகாலமாக கட்டுமான பணிகளுக்கான மூலப்பொருட்களின் விலை அதிகரித்து உள்ளது. இதனால் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களின் எம்.சாண்ட் உரிமையாளர்கள் ஒரு யூனிட் எம்.சாண்ட் மணல் விலை ரூ.5 ஆயிரம் வரை உயர்த்தியுள்ளனர். கிராவல், ஜல்லி கற்கள் போன்றவற்றின் விலையும் உயர்ந்திருக்கிறது.
எனவே எம்.சாண்ட், கிராவல், கற்களின் விலையை முறைப்படுத்தக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பொருட்களின் விலையை முறைப்படுத்த மாநில அளவில் குழு அமைக்கவும், அவற்றின் விலை உயர்வு குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக தமிழக கனிம வளத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications