முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மீது சி.பி.ஐ. வழக்கு! அதிரடியாக ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை!
மதுரை: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மீது சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்துள்ளது. டி.எஸ்.பி காதர் பாட்ஷா தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து பொன்.மாணிக்கவேல் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் ஐ.ஜி.யாக பணியாற்றிய பொன். மாணிக்கவேல் ஓய்வு பெற்ற பின்னரும், அவர்மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதே பிரிவில் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய காதர் பாட்ஷா உள்ளிட்டோர் சிலை கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில், பொன்.மாணிக்கவேல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காதர் பாட்ஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ.-க்கு உத்தரவிட்டது.

பொன். மாணிக்கவேல்
இதன் பேரில், சி.பி.ஐ. பொன். மாணிக்கவேல் மீது வழக்குப் பதிவு செய்து, குற்றப்பத்திரிகையை மதுரை கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனை எதிர்த்து, "சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை; எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என்றும், "குற்றப்பத்திரிகை நகலை தமக்கு வழங்க உத்தரவிட வேண்டும்" என்றும் பொன். மாணிக்கவேல் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
சி.பி.ஐ
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா தனது தீர்ப்பில், "சி.பி.ஐ. பதிவு செய்த குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. குற்றப்பத்திரிகையும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. அதற்கான முதல் தகவல் அறிக்கையும் தேவையற்றது." எனவும் குறிப்பிட்டார். மேலும் அவர், "சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்புக் குழுவின் முயற்சியை சீர்குலைக்கும் வகையில் எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது. ஆதாரமற்ற குற்றப்பத்திரிகைகளை அனுமதித்தால், விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கு எதிராக திட்டமிட்ட தாக்குதல் நடத்த கும்பல்கள் முயலலாம். இது நீதி முறைமையின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும்," என்றும் தெரிவித்தார்.
உயர்நீதிமன்றம்
மேலும், மாணிக்கவேலுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறிய காதர் பாட்ஷாவுக்கு எதிரான வழக்கே இன்னும் நிலுவையில் உள்ளது என்றும், அப்படியிருக்கும்போது மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
வழக்கு ரத்து
இதனை அடிப்படையாகக் கொண்டு, பொன். மாணிக்கவேல் மீது சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கையும் குற்றப்பத்திரிகையையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications