கோயிலை பூட்டி வைப்பது.. சுவாமியை சிறை வைப்பதற்கு சமம்! உத்தரபுரம் வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து
மதுரை: மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் தீண்டாமை சுவர் பிரச்சினை காரணமாக பூட்டி வைக்கப்பட்டுள்ள முத்தாலம்மன், மாரியம்மன் கோயிலைத் திறந்து, நாள்தோறும் பூஜைகள் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, கோயிலைப் பூட்டி வைப்பது சுவாமியை சிறை வைப்பதற்கு சமம் என தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் பழமையான முத்தாலம்மன், மாரியம்மன் கோயில் உள்ளது. இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு உத்தபுரத்தில் தீண்டாமை சுவர் எழுப்பப்பட்டதால் இரு சமுதாய மக்களிடையே பிரச்னை ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினர் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர்.

இந்த நிலையில் இரு சமுதாயத்தினரும் சமாதானமாக செல்வதாக தீர்மானித்தனர். அதில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலை நிர்வகிக்கவும், மற்றொறு சமுதாயத்தைச் (ஆதி திராவிட) சேர்ந்தவர்கள் கோயிலில் வழிபடவும் முடிவு எடுத்தனர்.
இந்த சூழலில் கடந்த 2014 ஆண் ஆண்டில் இரு சமுதாயத்தினரிடையே மீண்டும் பிரச்னை எழுந்தது. இதன் காரணமாக மீண்டும் முத்தாலம்மன் கோயில் பூட்டப்பட்டது. இந்நிலையில் உத்தபுரத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ள முத்தாலம்மன், மாரியம்மன் கோயிலைத் திறந்து, நாள்தோறும் பூஜைகள் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என மதுரை மாவட்டம் உத்தபுரத்தைச் சேர்ந்த ஜி. பாண்டி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அண்மையில் பிறப்பித்த உத்தரவில்," இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக கோயி லைப் பூட்டியதால், சுவாமிக்கு பூஜைகள் செய்ய முடியவில்லை. கோயிலைப் பூட்டி வைப்பது, சுவாமியை சிறை வைப்பதற்கு சமம். குற்ற வழக்கில் சிறையில் உள்ள கைதிகளுக்கு உணவு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கிறது. இந்த வழக்கில் சுவாமிக்கு தேவையான பூஜை உள்ளிட்ட தேவைகள் கிடைக்கப் பெறவில்லை.
கோயிலை காலவரையின்றி மூடி வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபோன்ற நிகழ்வுகளை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கக் கூடாது. இந்த வழக்கில் யாருக்கு உரிமை உள்ளதோ, அவர்களுக்கு சாதகமான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். உத்தபுரம் கோயிலை ஒரு சமுதாயத்தினர் மூடியுள்ளனர், இதில் அதிகாரிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஏற்றுக் கொள்ள முடியாது. கோயிலை மூடியதாக கூறப்படும், அந்த சமுதாயத்தினர் அந்த கோயிலைத் திறக்க வேண்டும் என ஏன் நீதிமன்றம் வர வேண்டும்.
அவர்கள் கோயிலைத் திறந்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற அச்சத்தால் நீதிமன்றம் வந்துள்ளனர். கோயில் நிலை குறித்த புகைப்படத்தை மனுதாரர் சமர்பித்திருந்தார். அதில் கோயிலானது மோசமான நிலையில் இருப்பது தெரிந்தது. இந்த வழக்கில் கோயிலைத் திறந்து வழக்கம் போல் பூஜைகள் நடத்த அனுமதி வழங்கி உத்தர விடப்படுகிறது. இதில் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், சம்பந்தப்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளலாம். சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, எந்த கோயிலையும் பூட்டக் கூடாது" என நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications