மோடி,அமித்ஷாவை சந்திப்பேன் எனக்கூறிய மதுரை ஆதீனம்.. போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரிக்கை -என்ன காரணம்?
தமிழ்நாட்டில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கப்போவதாக அறிவித்த மதுரை ஆதீனத்துக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி வக்கீல்கள் மதுரை காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
Recommended Video
தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் விபத்து நடந்த பகுதியையும், அப்பர் மடத்தினையும் மதுரை ஆதீனம் நேற்று பார்வையிட்டு மெளன அஞ்சலி செலுத்தினார்.
மதுரை ஆதின மடத்தின் புதிய மடாதிபதி போட்ட 6 உத்தரவுகள் - பல்லக்கில் பட்டினபிரவேசம் செய்து ஆசி
மோடி, அமித்ஷாவை சந்திக்க உள்ளேன்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆதீனத்திற்கு சொந்தமான கோயில்களின் சொத்துக்களை வைத்துக் கொண்டு ஆளும் கட்சியினர் குத்தகை தொகையை தர முடியாது என மிரட்டுகிறார்கள். உன்னால் திருப்பணி செய்ய முடியுமா? ஊருக்குள் நுழைய முடியுமா? என ஆளும் கட்சியினர் கேட்கிறார்கள். என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாரதப் பிரதமரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிட உள்ளேன்.
பட்டினப் பிரவேசத்துக்கு ஆதரவு
பாரம்பரியம் மிக்க பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது. நான் இப்படி பேசுகிறேன் என்றால் அதற்குக் காரணம் தருமபுர ஆதீனம்தான். பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை முதல்வர் வந்து நடத்த வேண்டும். பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை நடத்த முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன்.
உயிரையும் கொடுப்பேன்
முதல்வர் உடன்படவில்லை என்றால் அந்த சொக்கநாதரிடம் கோரிக்கை வைப்பேன். 500ஆண்டு காலமாக பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆங்கிலேயர் காலத்திலும் பட்டினப்பிரவேசம் நடைபெற்றது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும் நடந்தது. முதல்வராக கருணாநிதி இருந்த போதும் பட்டினப்பிரவேசமும் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. உயிரைக் கொடுத்தாவது எனது குருவான தருமபுர ஆதீனத்திற்கு பட்டினப் பிரவேசத்தை நடத்துவேன்." என்றார்.
போலீஸ் பாதுகாப்பு கோரி மனு
இந்த நிலையில், மதுரையில் வழக்கறிஞர் முத்துக்குமார் தலைமையில் ராஜேந்திரன், நீலமேகம், கௌரிசங்கர், அமிழ்தன், நாகராஜ் பாண்டிவேல்ராஜன், முகமது ரஸ்வி ராஜு ஆகிய வழக்கறிஞர்கள் மதுரை போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரை சந்தித்து ஆதீனத்திற்கும் ஆதின மடத்திற்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி மனு அளித்தனர்.
இந்து விரோத சக்திகளால் ஆபத்து
அதில், "மதுரை ஆதினமடம் 293 ஆண்டுகாலம் பாரம்பாரியம் மிக்கது. திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. சமீபத்தில் அவரது உயிருக்கும் ஆதின மடத்திற்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இந்து விரோத சக்திகள் எந்த நேரமும் மதுரை ஆதினகர்த்தா மீதும் மடத்தின் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் மத மோதல்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி
இது தொடர்பாக இன்று காலையில் ஆதினம் அவர்களை நேரில் சந்தித்து நிலவரம் அறிந்தோம். அவரும் உரிய பாதுகாப்பு கேட்டு பேட்டி அளித்துள்ளார். ஆகவே மதுரை ஆதினத்திற்கும், ஆதின மடத்திற்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளித்து பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க இந்து மதத்தை பாதுகாக்க பொதுநலன் கருதி கேட்டு கொள்கிறேன்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்ற மதுரை ஆணையர் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை ஆணையாளர் உறுதி அளித்துள்ளார்.