மதுரை ஏர்போர்ட் பார்க்கிங்கில் மோசடி.. சீனுக்கு வந்த வெங்கடேசன் எம்பி.. அடுத்து நடந்தது இதுதான்
மதுரை: மதுரை விமான நிலைய பார்க்கிங்கில் விதியை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்த விவகாரத்தில் புகார் அளித்ததின் பேரில் சம்பந்தப்பட்ட ஊழியர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மதுரை மக்களவை தொகுதி எம்பி சு வெங்கடேசன் கூறியுள்ளார்.
தூங்காநகரம் என்ற பெருமைக்குரிய மதுரை எப்போதுமே பரபரப்பாக காணப்படும். தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பலரும் மதுரை வழியாகவே செல்வதால் வாகன போக்குவரத்தும் அதிகளவில் இருக்கும். அதேபோன்று மதுரை விமான நிலையத்திலும் பயணிகள் வருகை சற்று அதிமாகவே இருக்கும். மதுரை பெருங்குடி பகுதியில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் தமிழ்நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாக உள்ளது.

மதுரையில் இருந்து கொழும்பு உளிட்ட வெளிநாட்டு நகரங்களுக்கும் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் விமானம் உள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுடன் அவர்கள் உறவினர்களும் அதே போல் மற்ற மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளை வரவேற்க அவர்களது உறவினர்களும் வருகை தருவதை பார்க்க முடியும். தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் மதுரை ஏர்போர்டை பயன்படுத்துவதால் கொஞ்சம் பிசியாகவே இருக்கும்.
ஏர்ப்போர்ட்டிற்கு பயணிகளை டிரப் செய்ய வாகனங்களில் வருவோரின் நேரம் பதிவு செய்யப்பட்டு அவர்கள் வெளியேறும் போது கட்டணம் வசூலிக்கப்படும். பொதுவாக அனைத்து ஏர்போர்ட்களிலும் இதே நடைமுறைதான் உள்ளது. ஆனால், மதுரை ஏர்போர்ட்டில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்தது.
அதாவது மதுரை ஏர்போர்ட்டை பொறுத்தவரை அங்கே அரை மணி நேரத்திற்கு 20 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், 30 நிமிடங்களுக்குள் வெளியே வரும் வாகனங்களிடமும் 60 ரூபாயை அங்குள்ள ஊழியர்கள் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்தன. பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் பணியில் வட மாநில ஊழியர்கள் இருப்பதால் அவர்களுக்கு தமிழ் தெரிவது இல்லை.
இந்த நிலையில், மதுரை ஏர்போர்ட்டில் பார்க்கிங்கிற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான வீடியோ ஒன்று நேற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அந்த வீடியோவில், 9.21க்கு மதுரை ஏர்போர்ட் உள்ளே வந்த நபர் ஒருவர் வெளியேறும் போது 28 நிமிடங்கள் ஆகியுள்ளது. அப்போது அங்கே இருக்கும் வடமாநில இளைஞர் முதலில் 60 ரூபாயைக் கேட்கிறார். காரில் வந்த நபர் "எப்படி 60 ரூபாய்" என்று கேட்கவே.. அதற்கு ஏதேதோ சொல்லிச் சமாளிக்க முயல்கிறார் அந்த வடமாநில இளைஞர்..
பிறகு வீடியோ எடுப்பதைப் பார்த்தவுடன் பதறிய அந்த வடமாநில இளைஞர், ஏதோ காரில் வந்த நபர் பிரச்சினை செய்வதைப் போலக் காட்ட முயல்கிறார். மேலும், காரில் வந்த அந்த நபரை வீடியோ எடுக்கும் வடமாநில இளைஞர், தான் ரூ.20ஐ மட்டுமே கேட்டதாகவும் குறிப்பிடுகிறார். இருப்பினும், அந்த வடமாநில இளைஞர் முதலில் ரூ.60ஐ கேட்பது வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அதற்குப் பலரும் இது ஏதோ ஒருவருக்கு மட்டும் நடந்த சம்பவம் இல்லை என்றும் தாங்களும் இதுபோல அதிகப் பணம் கொடுக்க நேர்ந்துள்ளதாகக் கூறினர். இந்த வீடியோ வெளியான நிலையில், பலரும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நிலையில்தான், இந்த விவகாரத்தில் மதுரை எம்.பி சு வெங்கடேசன் தலையிட்டுள்ளார். இது தொடர்பாக வெங்கடேசன் எம்.பி கூறியதாவது:-
மதுரை விமான நிலையத்தில் விதிமீறலாக வாகன நிறுத்த கட்டண வசூல் செய்யப்பட்ட பிரச்சனை குறித்து விமான நிலைய இயக்குநர் எனக்கு மின்னஞ்சல் மூலம் பதில் அளித்துள்ளார். அப்பதிலில் "அதுகுறித்து வணிக மேலாளர் நேரடி விசாரணையை மேற்கொண்டார். விதிமீறிய வாகனநிறுத்த கட்டண வசூல் உறுதி செய்யப்பட்டதால் அப்பணியாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் . மேலும் அப்பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தினிடம் இனி இது நிகழக்கூடாது என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பேசினார்.












Click it and Unblock the Notifications