மதுரை அம்மாபட்டி கோயிலில் 80 கிடா, 150 கோழி வெட்டி படையல் - வீட்டுக்கே வந்த பிரியாணி பிரசாதம்
திருமங்கலம் அருகே சடச்சியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஆடு, கோழி வெட்டி பிரியாணி சமைத்து படையல் போட்டு வீடு வீடாக பிரசாதம் கொடுத்துள்ளனர்.
மதுரை: திருமங்கலம் அருகே உள்ள அம்மாபட்டி அம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்க 80 ஆட்டுக் கிடாய்கள் 150 கோழி வெட்டி படையல் போட்டு பிரியாணி சமைத்து வீடு வீடாக பிரசாதம் அளித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் உள்ள அம்மாபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காவல் தெய்வமாக சடச்சியம்மன் உள்ளார். மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக பக்தர்களால் போற்றப்படும் இந்த அம்மனுக்கு 20 சமூகத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் ஒற்றுமையுடன் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா எடுத்து கொண்டாடி வருகின்றனர்.
எந்த விட ஆடம்பரமும் இல்லாமல் திருவிழா நடைபெறுகிறது. இந்தாண்டு நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் கொடுப்பதற்காக சுமார் 80 ஆட்டுக் கிடாய்கள், 150 கோழிகள் வெட்டப்பட்டன.
வெட்டப்பட்ட ஆடு கோழிகளின் ரத்தம் அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பின்னரே பிரியாணி தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது.
கொரோனா காலமாக இருப்பதால் அம்மனுக்கு படையல் போடப்பட்ட பிரியாணியை கோயிலைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு வீடு வீடாக விநியோகம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமாகக் கோயில் வாசலிலும் பிரியாணி பரிமாறப்பட்டது.