மதுரை சித்திரை திருவிழா: சிறப்பு பாஸ், வி.ஐ.பி பாஸ் எதற்கும் அனுமதி தர வேண்டாம் - ஹைகோர்ட்
மதுரை சித்திரை திருவிழாவின் போது சிறப்பு பாஸ், வி.ஐ.பி பாஸ் என எதற்கும் அனுமதி கொடுக்க வேண்டாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை: கொரோனா இரண்டாவது தீவிரமாக பரவி வருவதால் பொதுமக்கள் நலன் கருதி மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்ற கோயில் நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சித்திரை திருவிழாவின் போது சிறப்பு பாஸ், வி.ஐ.பி பாஸ் என எதற்கும் அனுமதி கொடுக்க வேண்டாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா என்பது தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும். மீனாட்சியம்மன் திருக்கோவில் திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் அழகர் எதிர் சேவை, அழகர் ஆற்றில் இறங்குவது உட்பட தொடர்ந்து 15 நாட்கள் இந்த திருவிழா என்பது மிகவும் சிறப்பாக நடைபெறும்.

இந்த திருவிழாவை காண்பதற்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள். கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசின் சார்பாக இந்த விழா என்பது இந்த வருடமும் பக்தர்கள் அனுமதி இன்றி உரிய விதிமுறைகளை பின்பற்றி கோவில் ஊழியர்களுடன் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.
சித்திரை திருவிழாவை இந்த ஆண்டும் திருவாலவாய் பக்தர்கள் இணையதளம் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக பக்தர்கள் பார்த்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி தான் தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சிவகங்கையை சேர்ந்த. வழக்கறிஞர் மணி கண்டன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 15 ம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மதுரை சித்திரை திருவிழாவை காண அனுமதி மறுக்கப்படுகிறது எனவே உரிய கட்டுபாடுகளுடன் விழாவை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல், கள்ளழகர் ஒரு நாள் மட்டும் வைகை ஆற்றில் இறங்கி செல்ல அனுமதி வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தான் விழாவை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் நாள் தோறும் விழா முடிந்ததுடன் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். கோவில் பணியாளர்கள் மட்டும் உரிய விதிமுறைகளை பின் பற்றி நடத்துவதாகவும் கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சித்திரை திருவிழாவில் மதுரை மீனாட்சி அம்மன். கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சித்திரை திருவிழாவின் போது, சிறப்பு பாஸ் , விஐபி பாஸ் என எதற்கும் அனுமதி கொடுக்க வேண்டாம்.
தமிழகத்தில் அனைத்து விழாக்களுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. விழாவை காண மட்டுமே அனுமதி மறுக்கப்படுகிறது. நாள் தோறும் விழா முடிந்தவுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கொரோனா 2 ம் அலை பரவல் காலத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கினால் அவர்களை பாதுகாப்பது எப்படி என்று கேள்வி எழுப்பினர்.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் உரிய நிலை அறிக்கை பின்பற்றி வழிமுறைகளை வகுத்துள்ளனர். நீதிமன்றம் இந்த விசயத்தில் தலையிட விரும்பவில்லை. கொரோனா தடுப்பு வல்லுநர்கள் இணைந்து இந்த கொரோனா தடுப்பு வழிமுறைகளை வகுத்து உள்ளனர். அரசு பொது நல நலன் கருதி தான் கோவில் திருவிழாக்களுக்கு கட்டுபாடுகளை விதித்து உள்ளது. எனவே திருவிழாவின் போது பக்தர்களை அனுமதி வழங்க உத்தரவு பிறப்பிக்க இயலாது என உத்தரவிட்டனர் .












Click it and Unblock the Notifications