போஸ்டர் ஒட்டினா 5000 ஃபைனா? முதல்ல குவிந்திருக்கும் குப்பையை அள்ளுங்க! மதுரை மாநகராட்சிக்கு கண்டனம்
மதுரை: மதுரை மாநகராட்சியில் போஸ்டர்கள் ஒட்டுவதால் நகரின் அழகு கெடுவதாக கூறி ஆயிரம் ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதித்து, போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க மதுரை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த நிலையில் மதுரை மாநகராட்சி பகுதிகளில் மலைபோல் குப்பைகள் தேங்கி இருக்கும் நிலையில் அவற்றையெல்லாம் அள்ளாமல், போஸ்டர்கள் ஒட்டுவதற்கு அபராதம் விதிப்பது தவறானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்," மதுரை மாநகராட்சி கூட்டம் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதால் மாநகரின் அழகு குறைவதாகவும், குப்பைகள் அதிகமாவதாகவும், மாநகராட்சிக்கு அவப்பெயர் மற்றும் பொது சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

சுவரொட்டி அபராதம்
கூறி சுவரொட்டிகள் ஒட்டினால் ரூ.1,000 முதல் ரூ.5000 அபராதம் விதித்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாகநராட்சிக்குட்பட்ட சாலைகள், தெருக்களில், கடைகள், வீடுகளுக்கு குப்பை வரி வசூல் செய்தாலும், குப்பைகள் அள்ளப்படாமல் மலைபோல் குவிந்து காணப்படுகிறது. மாநகராட்சிக்குட்பட்ட 11 கால்வாய்களில் குப்பை தேங்கி கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. கால்வாய்களில் மரங்கள், செடிகள் வளர்ந்து புதர் போல் மண்டிக்கிடக்கிறது.
மதுரை மாநகராட்சி
கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் நீடிக்கிறது. மதுரை நகர் வீதிகளில் பாதாளச் சாக்கடை ஏற்பட்டு கழிவுநீர் தெருக்களில் ஆறாக ஓடுகிறது. குடிநீரில் கழிவுநீர் கலந்து சாக்கடை நீர் கலந்த குடிநீரை மக்கள் பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது. குண்டும், குழியுமான சாலைகள் சீர் செய்யப்படாமல் இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.
குப்பை பிரச்சனை
மதுரை மாநகராட்சி வீதிகள் தூசி மண்டலமாக காணப்படுகிறது. மக்கள் மாசு கலந்த காற்றை சுவாசிக்கிறார்கள். சுவாச நோயால் பாதிக்கப்படுகிறார்கள். மாநகராட்சி நிர்வாகம் இந்த பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தி தேவையான பணியாளர்களை நியமித்து துரித நடவடிக்கை எடுத்தாலே போதும், மதுரை மாநகரம் எழில் மிகு நகரமாக மாறும். சுகாதாரமான, பாதுகாப்பான, தூய்மையான மாநகராட்சியாக மதுரை மாறும்.
மாநகராட்சி தீர்மானம்
அதைவிடுத்து, போஸ்டர்கள் ஒட்டுவதால் குப்பைகள் தேங்குவதாகவும், சுகாதாரசீர்கேடுகள் ஏற்படுவதாகவும் கூறி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது எந்த வகையிலும் பொருத்தமானது அல்லது. மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் குறுித்து ஜனநாயக அமைப்புகள், அரசியல் கட்சியினர், தங்களது கருத்துகளை போஸ்டர்கள் மூலமே வெளியிட்டு வரும்நிலையில் அவர்களது ஜனநாயக உரிமைகளை பறிக்கும் வகையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நகரின் அழகு குறைவதால், போஸ்டர்கள் ஒட்டினால் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கவும், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications