திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை - 3வது நீதிபதி அதிரடி உத்தரவு
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதித்து ஐகோர்ட் கிளை 3வது நீதிபதி விஜயகுமார் இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும், சிக்கந்தர் தர்கா செல்லும் வழியில் நெல்லித்தோப்பில் இஸ்லாமியர் வழிபாடு நடத்த தடையில்லை என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் 2 நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்புகளை தொடர்ந்து 3வது நீதிபதி விசாரணை நடத்தினார். இந்நிலையில் மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும் என மூன்றாவது நீதிபதி தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர்கள் கந்தூரி கொடுப்பதை எதிர்த்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழியுடன் ஏறக் கூடாது என்று காவல்துறை தரப்பில் உத்தரவிடப்பட்டது சர்ச்சையாக வெடித்தது. திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தமானது மற்றும் நில பயன்பாடு தொடர்பான வழக்குகள் உள்ளன.
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதாக, இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தன் மனுவில், 'மலை மீதுள்ள சிக்கந்தர் தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, தர்கா செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர, மற்ற பகுதிகள் அனைத்தும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமானவை. ஆங்கிலேயர் ஆட்சியின்போதே, இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. எனவே, ஆடு, கோழி பலியிட்டு, சிக்கந்தர் மலையாக மாற்றும் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும்' எனக் கோரி இருந்தார்.
இதேபோல, இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலர் ராமலிங்கம், "பக்ரீத் பண்டிகையையொட்டி, திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான பாதையை மறைத்து, நெல்லித்தோப்பு பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்" என மனு தாக்கல் செய்தார்.
சிக்கந்தர் தர்கா பகுதியில் பாராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி கோரி சிக்கந்தர் தர்காவின் முதுநிலை மேலாண்மை அறங்காவலர் ஒசிர்கான் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். சிக்கந்தர் தர்காவுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி ஏற்படுத்தக்கோரி அப்துல் ஜப்பார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதுபோல, ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு, கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. ஆனால், அமர்வில் இருந்த இரண்டு நீதிபதிகளில், நீதிபதி நிஷா பானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார். நீதிபதி ஸ்ரீமதி, மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தார். இதனால், மூன்றாவது நீதிபதி விஜயகுமார் முன்பு மனுக்கள் மீதான விசாரணை மாற்றப்பட்டது.
இது தொடர்பாக விசாரித்து வந்த தனி நீதிபதி ஆர்.விஜயகுமார் இன்று தீர்ப்பு வழங்கினார். அவர் வழங்கிய தீர்ப்பில், ஆடு, கோழி பலியிட தடை விதித்து, இது குறித்து சிவில் நீதிமன்றத்தை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்ற நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தினார்.
மேலும், இஸ்லாமியர்கள் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி நிஷா பானுவின் உத்தரவையும் உறுதிப்படுத்தினார். மேலும் இந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications