தரமற்ற சாலைகள்.. பல கோடி ரூபாய் முறைகேடு செய்யவே அமைக்கிறார்கள்.. உயர்நீதிமன்றம் அதிரடி முடிவு
மதுரை: சாலைகள் அமைக்கப்பட்டவுடன் சில மாதங்களிலேயே பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசம் அடைந்து விடுகின்றன. புதிது புதிதாக டெண்டர் நடத்தி பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதன் மூலம் காண்டிராக்டர்களும், அரசு அதிகாரிகளும் முறைகேடு செய்ய முடியும் என்பதுதான் தரமற்ற சாலைகள் அமைப்பதற்கு காரணம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் ஆனந்தபுரத்தைச் சேர்ந்த சி.எம்.ராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், தனது ஊரில் அமைக்கப்பட்ட தரமற்ற சாலைகள் குறித்து வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் ராகவன் கூறுகையில், திருநெல்வே9ல மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் மதவக்குறிச்சி முதல் உகந்தான்பட்டி இடையே சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை கடந்த 2018-ம் ஆண்டில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த சாலை அமைக்கப்பட்ட 2 மாதத்தில் முழுமையாக சேதமடைந்தது. தரமற்ற சாலை அமைத்த கான்டிராக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும் முறையாக அங்கு சாலையை சீரமைக்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் தெரிவிக்கும் பகுதியில் புதிதாக சாலை அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகிறார்கள் என்று கூறியிருந்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சாலைகள் அமைக்கப்பட்டவுடன் சில மாதங்களிலேயே பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசம் அடைந்து விடுகின்றன. புதிது புதிதாக டெண்டர் நடத்தி பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதன் மூலம் காண்டிராக்டர்களும், அரசு அதிகாரிகளும் முறைகேடு செய்ய முடியும் என்பதுதான் தரமற்ற சாலைகள் அமைப்பதற்கு காரணம் என்று தங்கள் கவலையை வெளிப்படுத்தினர்.
மேலும் நீதிபதிகள் கூறுகையில், ஒருமுறை சாலையை அமைத்தால் எத்தனை ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என விதிமுறைகள் உள்ளனவா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அரசு வக்கீல், 3 முதல் 5 ஆண்டுகள் வரை சாலைகள் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்பது விதிமுறை என தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், எந்த சாலையாவது இந்த விதிமுறைகளின் படி குறிப்பிட்ட ஆண்டுகள் வரை தரமான முறையில் பயன்பாட்டில் இருக்கிறது என்பதை டெண்டர் பெறும் காண்டிராக்டர்கள் உறுதிப்படுத்த இயலுமா? இது போன்ற நடவடிக்கைகளால் அரசுக்கு வெறும் நிதி இழப்பு ஏற்படுகிறது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "நெடுஞ்சாலைத்துறை விதிகளின் படி சாலைகள் அமைக்கப்படுகிறது என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். கண்காணிப்பு மற்றும் கள ஆய்வில் கவனக்குறைவு ஏற்பட்டால் அதிகாரிகளும், காண்டிராக்டர்களும்தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சாலைகள் அமைக்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காண்டிராக்டர்கள் இணைந்து நிதி இழப்பை ஏற்படுத்தினால் அந்த தொகையை அவர்களிடம் தான் வசூலிக்க வேண்டும். இது குறித்த வழிகாட்டுதல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநில நெடுஞ்சாலைத்துறை செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஆகியோர் வழங்க வேண்டும்" இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications