மது பிரியர்களுக்காக இவ்வளவும்.. மத்திய அரசு வழக்கறிஞர்கள் டாஸ்மாக் போகனும்! ஐகோர்ட் பரபர ஆர்டர் -ஏன்?
மதுரை: டாஸ்மாக் கடைகளில் விலைப் பட்டியல் வைக்கப்பட்டு உள்ளதா என்பதை மத்திய அரசு வழக்கறிஞர்கள் ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 4,238 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக அடிக்கடி மது பிரியர்கள் புகார்களை தெரிவித்து வந்தார்கள். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய மது பிரியர் போலீசால் தாக்கப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று நடைபெற்ற அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தினமும் ரூ.10 கோடி ஊழல் நடப்பதாகவும் குற்றம்சாட்டினார். இது தொடர்பான பிரச்சனைகளை களைய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி தமிழ்நாட்டின் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் விலைப்பட்டியல் பலகையை அரசு வைத்தது வரவேற்பை பெற்றது. முதல் கட்டமாக 200 கடைகளில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த டிஜிட்டல் பலகையில் மதுபானங்களில் விலை குறித்த பட்டியல் இடம்பெற்று இருக்கிறது. இதன் காரணமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை நடப்பது கட்டுப்படுத்தப்படும் என்பது அரசின் நம்பிக்கை.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் தெரியும்படி விலைப் பட்டியல் வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என மத்திய மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அனைவருக்கும் தெரியும் வகையில் விலைப் பட்டியல் வைக்கப்பட்டு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிட்டனர். மத்திய அரசின் வழக்கறிஞர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று இந்த ஆய்வை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
அனைவருக்கும் தெரியும் வகையில் விலைப் பட்டியல் வைக்காவிட்டால் போலீஸ் துணையுடன் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறிய உயர்நீதிமன்ற மதுரை கிளை, இதற்காக அறிக்கையை புதன்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications