மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு "வாய்ப்பூட்டு.." திடீர் கட்டுப்பாட்டால் அதிர்ச்சி
மதுரை: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு பேட்டியோ, அறிக்கையோ அளிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த எம்.கிருஷ்ணன் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாத இறுதியில் புதிய துணை வேந்தராக பேராசிரியர் குமாரை ஆளுநர் ஆர்.என்.ரவி நியமனம் செய்துள்ளார்.
ஸ்டாலின்தானே முதல்வர் .. பிறகு ஏன் மோடிகிட்ட மின்சாரம் கேட்கறீங்க..ரிசைன் பண்ணுங்க.. சிடி ரவி ஆவேசம்
கட்டுப்பாடு
இந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து பல்கலைக்கழகத்தின் அனைத்து நோடல் அதிகாரிகள், பேராசிரியர்கள், தலைவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதில், "பேராசிரியர்கள், அலுவலர்கள், ஆய்வு மாணவர்கள் அனுமதி இல்லாமல் தகவல்களை பத்திரிகைகள், ஊடகங்களுக்கு செய்தியாகவோ அறிக்கையாகவோ பேட்டியாகவோ தெரிவிக்கக்கூடாது. செய்தி அறிக்கையை வெளியிடுவதற்கு முன் அனுமதியை பெற வேண்டும்.
பேராசிரியர்கள் எதிர்ப்பு
முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள் வருவதாக இருந்தால் இரண்டு வாரங்களுக்கு முன் தெரிவித்தாக வேண்டும். அனைத்து துறைகளிலும் வகுப்பறைகளை மாணவர்கள், ஆசிரியர்கள் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மாணவர்களின் குறைகளை கேட்க மாணவர் குறைதீர்க்குழுவை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பல்கலைக்கழகத்தின் இந்த உத்தரவுக்கு பேராசிரியர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.
வாய்ப்பூட்டு
இது தங்களுக்கு போட்ட வாய்ப்பூட்டு என்று பேராசிரியர்கள் கூறியுள்ளனர். நிர்வாகத்துக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான ஒற்றுமையை பாதிக்கும் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது, "பல்கலைக்கழகத்தில் பல சங்கங்கள் உள்ளன. அலுவலர்கள், பேராசிரியர்கள் பொறுப்புகளில் முக்கிய பிரமுகர்கள் இருக்கிறார்கள். எங்களின் பல கோரிக்கைகள் பத்திரிகை செய்திகள் மூலமாகவே நிறைவேறுகின்றன.
பெயரை கெடுக்க மாட்டோம்
அண்மையில்கூட மாணவிகள் விடுதியில் போராட்டங்களில் ஈடுபட்டனர். விடுதிகளில் ஏற்கனவே பல மாதங்களாக குறைகள் இருந்து வந்தன. ஊடகங்களில் செய்திகள் வெளியான பிறகே துணைவேந்தருக்கும் பிரச்சனைகள் தெரிய வந்தன. எப்போதும் பேராசிரியர்கள் பல்கலைக்கழக பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செய்தியை தர மாட்டார்கள். எங்கள் மீது நம்பிக்கை இழக்க வேண்டாம். இதை பதிவாளர் புரிந்துகொள்ள வேண்டும்." என கேட்டுக்கொண்டுள்ளனர்.