மதுரை வந்த ஆளுநர் ரவிக்கு ஷாக்.. மாணவர்கள் போராட்டத்தால் அதிர்ந்த காமராஜர் பல்கலைக்கழகம்
மதுரை: மதுரை காமரஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மாணவர்கள் முழக்கமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக குற்றம்சாட்டி பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். காலையில் பறை இசை வாசித்து மகிழ்ச்சியுடன் வந்த ஆளுநருக்கு இந்த போராட்டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று விருதுநகர், மதுரை மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். காலை விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மேட்டுமலை பகுதியில் பாரதி பறை பண்பாட்டு மையத்தை ரவி தொடங்கி வைத்தார். அப்போது பத்மஶ்ரீ வேலு ஆசான் மற்றும் பறை இசை கலைஞர்களுடன் இணைந்து ரவி பறை இசைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பறை இசையை ஏன் பாடத்திட்டத்தில் சேர்க்கக் கூடாது என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டம் வழங்கினார். ரவியின் வருகையை முன்னிட்டு அவருக்கு இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் அவருக்கு கருப்பு கொடி காண்பித்து போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர் அமைப்பின் நிர்வாகிகளை காவல்துறையினர் காலை கைது செய்திருந்தனர்.
அதையும் மீறி ஆளுநர் ரவி காமராஜர் பல்கலைக்கழகம் அருகே வந்தபோது, இந்திய மாணவர் சங்கத்தினர் அவருக்கு எதிராக முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநர் தொடர்ந்து தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுவதாக கூறி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது காவல்துறை மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications