கேரளாவை கலக்கும் நம்ம ஊரு பொண்ணு.. கோட்டயம் கலெக்டர் விக்னேஷ்வரி.. எர்ணாகுளத்தில் யாரு தெரியுமா?
மதுரை : கேரள மாநிலத்தில் கலெக்டராகப் பொறுப்பேற்றுள்ளார் நம் மதுரையைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி விக்னேஷ்வரி. கேரளா அரசில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ள விக்னேஷ்வரி தற்போது கோட்டயம் கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயஸ்ரீ ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கேரளா சுற்றுலாத்துறை மேம்பாட்டு கழக இயக்குநராக இருந்த விக்னேஷ்வரி கோட்டயம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். விக்னேஷ்வரி கோட்டயம் மாவட்டத்தின் 48வது கலெக்டர் ஆவார்.

விக்னேஷ்வரி ஐஏஎஸ், கேரளாவில் கல்லூரி கல்வி இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். பல்வேறு பொறுப்புகளிலும் சிறப்பாக பணியாற்றி பாராட்டு பெற்ற விக்னேஷ்வரி தற்போது கோட்டயம் கலெக்டராகப் பொறுப்பேற்றுள்ளார்.

கேரளாவில் பணியாற்றும் விக்னேஷ்வரிக்கும் தமிழ்நாட்டின் மதுரைக்கும் பெரிய தொடர்பு உண்டு. கேரளா 2015 கேடர் ஐஏஎஸ் அதிகாரியான விக்னேஷ்வரி மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்தவர். இவரது தந்தை வெள்ளைச்சாமி, தாய் சாந்தி இருவரும் மதுரையில் வசிக்கின்றனர்.

விக்னேஷ்வரியின் கணவர் உமேஷும் ஐ.ஏ.எஸ் அதிகாரி தான். மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த உமேஷும் கேரளாவில் கலெக்டராகப் பணிபுரிந்து வருகிறார். அதுவும் தற்போது விக்னேஷ்வரி கலெக்டராக பொறுப்பேற்றுள்ள கோட்டயத்தின் பக்கத்து மாவட்டமான எர்ணாகுளத்தில் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருகிறார் உமேஷ்.

கோட்டயம் மாவட்ட ஆட்சியராக அண்மையில் பதவியேற்ற விக்னேஷ்வரி, முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் எனது கடமைகளை நிறைவேற்றுவேன் என உறுதி எடுத்துள்ளார். முன்னுரிமைக் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகளைக் கண்டறிய மக்களின் கருத்துகளை கேட்டுச் செயல்படுவேன். இதற்காக சமூக ஊடகப் பிரச்சாரம் தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் விக்னேஷ்வரி.












Click it and Unblock the Notifications