சட்டம் படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்ட பெண்.. இன்று ஐநாவில் முழங்க போகும் மதுரை மாணவி பிரேமலதா
Recommended Video
மதுரை: மதுரை மாவட்டம் இளமனூர் அருகே கார்சேரியைச் சேர்ந்த மாணவி பிரேமலதாவுக்கு ஐ.நா. மன்ற ஜெனீவா கூட்டத்தில் உரையாற்ற அழைப்பு வந்துள்ளது. இதற்காக ஜெனிவா சென்றுள்ள அவர் இன்றும் நாளையும் (அக்.1. அக் 2) உரையாற்ற உள்ளார். அவர் தனக்கு தமிழகத்தில் பலமுறை சட்டம் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி உள்ளார்.
மதுரை மாவட்டம் இளமனூர் அருகே கார்சேரியைச் சேர்ந்த இளங்கலை படிப்பு முடித்த மாணவி பிரேமலதா (21). இவர் தற்போது சட்ட கல்லூரியில் சேர்ந்து சட்டம் படிக்க உள்ளார்.
இவர் சிறுவயதில் இளமனூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் படித்தார். அப்போது 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடக் கல்வியோடு மனித உரிமைக் கல்வியையும் சேர்ந்து படித்தார்.
'பேரழிவில் பேரழகி'.. பீகார் வெள்ளநீரில் ஃபோட்டோசூட் நடத்திய இளம்பெண்.. கொதிக்கும் நெட்டிசன்கள்
குறும்படத்தில் பிரேமலதா
இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைக் கழகம் மூலம் மனித உரிமைக் கல்வி எப்படி செயல்படுத்தப்படுகிறது அதன் தாக்கங்கள் குறித்த "எ பாத் டூ டிக்னிட்டி' என்ற குறும்படம் தயாரிக்கப்பட்டது. கடந்த 2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த குறுப்படத்தில் அப்போது 8 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பிரேமலதா நடித்திருந்தார். அதில் ஒரு காட்சியில் மனித உரிமைக் கல்வியின் முக்கியத்துவம், சாதிய பாகுபாடு மற்றும் பாலினப் பாகுபாடு குறித்து கூறிருந்தார்.
ஜெனிவா செல்கிறார்
பிரேமலதா தற்போது, இளங்கலைப் பட்டம் முடித்து, சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்படும் நிலையில், ஐ.நா. மன்ற ஜெனீவா கூட்டத்தில் உரையாற்ற வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜெனிவா சென்றுள்ள மாணவி பிரேமலதா இன்றும் நாளையும் (அக்.1. அக் 2) ஐ.நா. மன்ற ஜெனீவா கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.
பலருக்கு உதவுவேன்
இது குறித்து பிரேமலதா ஜெனிவா செல்லும் சனிக்கிழமை அன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "எனது பெற்றோர்கள் கூலி தொழில் செய்து, என்னைப் படிக்க வைத்தார்கள். எங்கள் பள்ளியில் நான் கற்ற மனித உரிமைக் கல்விதான், கேள்விக் கேட்கும் உரிமையை எனக்கு தெரியவைத்தது. இதன்மூலம் பலருக்கும் உதவ முடியும் என்ற தன்னம்பிக்கை எனக்கு வந்துள்ளது. அப்போது நான் பயின்ற மனித உரிமைக் கல்வியால்தான், மனித உரிமைகளுக்கான ஐ.நா. மன்ற உயர் ஆணையர் அலுவலகத்திலிருந்து அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் ஐ.நா. மன்ற ஜெனீவா கூட்டத்தில் உரையாற்றுவதற்கு அழைப்பு வந்துள்ளது. அதில், "எ பாத் டூ டிக்னிட்டி' குறும்படம் திரையிடப்பட உள்ளது என்றார்.
|
பிரேமலதா பேட்டி
மனித உரிமைக் கல்வி மூலம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளை மேம்படுத்துதல், பாதுகாத்தல் என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்திற்கு பின்னர் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் சர்வதேச சமூக மன்றக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் பிரேமலதா கூறினார்.
சாதிகள் அதிகம்
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரேமலதா அளித்த பேட்டியில், ஐநா மன்ற ஜெனீவா கூட்டத்தில் பேசுதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நம் நாட்டில் பல சாதிகள் உள்ளன, இந்த சாதிகளை நாங்கள் விரும்பவில்லை. நான் எனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையில் பேசுவேன். நான் சட்டம் படிக்க விரும்புகிறேன், ஆனால் இந்த வாய்ப்பு எனக்கு பல முறை மறுக்கப்பட்டுள்ளது. எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்" என்றார்.