ஜல்லிக்கட்டில் தங்ககாசு மழை! தாராளம் காட்டும் அமைச்சர் மூர்த்தி! மாடுபிடி வீரர்கள் மிகுந்த உற்சாகம்!
மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் தங்கக்காசுகளை வாரி இறைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி.
கடந்தாண்டு நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டிலும் அமைச்சர் மூர்த்தி 100-க்கும் மேற்பட்டோருக்கு 2 கிராம் தங்ககாசுகளை பரிசாக அளித்து வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
அமைச்சர் மூர்த்தி வழங்கும் தங்கக் காசுகளால் மாடுபிடி வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் களமாடி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு விழா
மதுரை வடக்கு மாவட்ட திமுகச் செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சருமான மூர்த்தி மதுரை மாவட்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை காலையிலேயே தொடங்கி வைத்ததோடு அங்கிருந்து ஜல்லிக்கட்டை பார்வையிட்டு வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் பெயரில் நிசான் காரும், உதயநிதி ஸ்டாலின் பெயரில் இரண்டு பைக்குகளும் வழங்குகிறார் அமைச்சர் மூர்த்தி.

தங்கக்காசு
ஜல்லிக்கட்டு விழா மேடையில் போடப்பட்டிருக்கும் நாற்காலியில் கூட அமராமல் நின்றபடியே ஜல்லிக்கட்டை கண்டு ரசித்த அமைச்சர் மூர்த்தி, காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கு சொந்த நிதியிலிருந்து தங்கக்காசு பரிசளித்து வருகிறார். அமைச்சர் மூர்த்தி வாரி இறைக்கும் தங்கக்காசுகளை பெறுவதற்காகவே போட்டி போட்டுக் கொண்டு காளையர்கள் காளைகளை அடக்கி வருகின்றனர்.

''ஜல்லிக்கட்டு நாயகன்''
''ஜல்லிக்கட்டு நாயகன் அமைச்சர் மூர்த்தி என அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் நொடிக்கு ஒருமுறை மைக்கில் அறிவித்த வண்ணம் இருந்தனர். காரணம் அந்தளவுக்கு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினருக்கு தேவையான ஒத்துழைப்பை நல்கி எவ்வித பிரச்சனையும் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் மூர்த்தி மேற்கொண்டது தான். இதனிடையே அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு ஆளுநர் வருவதாக பரவிய தகவல் பொய் எனத் தெரியவந்துள்ளது.

பாலமேடு -அலங்காநல்லூர்
இன்று மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்று வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை போலவே நாளை பாலமேட்டிலும், நாளை மறுதினம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இன்றை காட்டிலும் நாளை மறுதினம் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காணம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications