மீண்டும் பாஜக ஆட்சியா? 2 மாதத்தில் கேபிள் தொழிலே அழிஞ்சிரும்.. அமைச்சர் பிடிஆர் கொடுத்த வார்னிங்..!
மதுரை: வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அடுத்த இரண்டு மாதத்தில் கேபிள் டிவி தொழிலை அழித்து விடுவார்கள் என தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் தலைவர்களும், வேட்பாளர்களும் இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களிடமும் நேரில் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் மதுரை மாவட்ட கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய PTR பழனிவேல் தியாகராஜன்,”மத்திய அரசு கேபிள் டிவி தொழிலை செய்ய விடாமல் பல இடையூறுகளை செய்தாலும் அதை முறியடிக்க வழக்குகளை தொடுத்து அதன்வழியாகவே வென்றெடுக்க முடியும். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் கார்ப்பரேட் நிறுவனங்களை வைத்து அடுத்த இரண்டு மாதத்தில் கேபிள் டிவி தொழிலை அழித்து விடுவார்கள்.

எனவே உங்கள் தொழில் பாதுகாப்பாக நடைபெற வரும் தேர்தல்களில் இந்தியா கூட்டணிக்கு வாக்கு சேகரியுங்கள். நீங்களும் வாக்களியுங்கள். விரைவில் அரசு கேபிள் டிவி தொழில்நுட்ப வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். விரைவில் வழங்கப்பட இருக்கும் அரசு ஹெச்.டி பாக்ஸ் மற்றும் ஐபி டிவி இன்டர்நெட் உட்பட பல தொழில்நுட்ப சேவைகள் அரசு கேபிள் வழியாக தர இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது ஆபரேட்டர்களும் நன்மை அடைய போகிறார்கள்.
கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் தஞ்சை ஜீவா மூலம் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் அனைவரும் வாரியத்தில் பதிவு செய்யவும் அதற்கான வழிமுறைகள் பற்றியும் அரசு கேபிள் டிவி சிக்னல் தடையின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். எனவே கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications