கெட்டுப்போன சிக்கன் பிரியாணி.. திமுகவினர் 100க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம்.. என்ன நடந்தது?
மதுரை: மதுரை மாவட்டத்தில் நடந்த திமுகவினரின் ஆலோசனை கூட்டத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கெட்டுப்பான பிரியாணி வழங்கியதே உடல்நலக்குறைவுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணிகளை இப்போது இருந்தே திமுக தொடங்கி விட்டது. மாவட்ட வாரியமாக திமுகவினர் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக 200க்கும் அதிகமான தொகுதிகளை வெல்ல வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் திமுகவினர் இப்போது இருந்தே கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி மாவட்ட வாரியாக நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் வில்லூரில் திமுக தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர் மதன்குமார் தலைமையில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு சிக்கன் பிரியாணி என்பது வழங்கப்பட்டது. டப்பாவில் அடைத்து வைத்து சிக்கன் பிரியாணி திமுகவினருக்கு வழங்கப்பட்டது. இந்த பிரியாணியை சாப்பிட்ட 100க்கும் அதிகமானவர்களுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களுக்கு வாந்தி - மயக்கம் ஏற்பட்டது.
கள்ளிக்குடி, லாலாபுரம், சத்திரம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளை சேர்ந்த திமுகவினர் மற்றும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வாந்தி மற்றும் மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விருதுநகர், திருமங்கலம், கள்ளிக்குடி அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு கெட்டுப்போன சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டு இருப்பதே காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது திமுகவினர் கூட்டத்துக்காக முந்தைய நாளிலேயே சிக்கன் பிரியாணி தயாரித்து டப்பாவில் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பிரியாணி கெட்டுப்போய் இருக்கலாம். இந்த கெட்டுப்போன பிரியாணியை சாப்பிட்டதால் தான் திமுகவினர் வாந்தி - மயக்கத்தால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications