நாங்குநேரி இடைத்தேர்தல் செலவை வசந்தகுமாரிடம் இருந்து பெறக்கோரிய மனு தள்ளுபடி!
நாங்குநேரி இடைத்தேர்தல் செலவு தொடர்பான மனு தள்ளுபடி
மதுரை: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை நடத்த ஆகும் செலவை நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமாரிடமிருந்து வசூலிக்கக் கோரிய வழக்கினைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த கேகே ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், " நாங்குநேரி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் தற்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். ஆகையால் நாங்குநேரி தொகுதியின் எம்எல்ஏ பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அந்த தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசு கோடிக்கணக்கான ரூபாயை தேர்தல் பணிக்காக செலவு செய்கிறது. ஏற்கனவே தமிழகம் 45 ஆயிரத்து 119 கோடி கடனில் இயங்கி வருகிறது. மழையின்றி போன நிலையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அரசின் பெரும்பாலான துறைகள் கடனிலேயே இயங்கி வருகின்றன. இந்நிலையில் இடைத்தேர்தலை நடத்துவது என்பதே அரசுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும்.
ஆகவே நாங்குநேரி தொகுதியில் இடைத் தேர்தலை நடத்துவதற்கு காரணமான ஹெச் வசந்தகுமார் அவரிடம் இருந்து இடைத்தேர்தலுக்கு ஆகும் செலவை வசூலிக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியும், எவ்வித பதிலும் இல்லை. ஆகவே, மக்களின் வரிப்பணத்தை பாதுகாக்கும் வகையில் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை நடத்த ஆகும் செலவை நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்தார் வசந்தகுமாரிடமிருந்து வசூலிக்க உத்தரவிட வேண்டும்"என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன் புகழேந்தி அமர்வு வழக்கினைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.