மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா விவகாரம் .. நவாஸ் கனி எம்பி வெளியிட்ட பரபரப்பு பதிவு
மதுரை: மதுரை சிக்கந்தர் மலை தர்கா விவகாரம் தொடர்பாக இன்று நேரில் சென்று கள ஆய்வு செய்தோம். மதுரை மாநகர காவல் ஆணையரை சந்தித்து பிரச்சனையின்றி சுமுகமாக கடந்த காலங்களில் எப்படி இருந்ததோ அதேபோல நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களும் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம் என தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் நவாஸ் கனி எம்பி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா நடத்தப்படுவது வழக்கம். இத்திருவிழாவையொட்டி கடந்த வாரம் ஆடு,கோழிகளை பலி கொடுத்து கந்தூரி விழா நடத்த ஐக்கிய ஜமாத் உள்ளிட்ட சில இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்திருந்தனர். இதற்கு இந்து முன்னணி உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட்டு கந்தூரி வழிபாடு செய்ய போலீசார் தடை விதித்தனர் தொழுகை வழிபாடு செய்ய மட்டுமே அனுமதி அளித்தனர். ஆட்டுக்கிடாயுடன் வந்த இஸ்லாமியர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் திருப்பரங்குன்றம் பள்ளிவாசலை சேர்ந்த ஜமாத்தாருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மறுநாள் எஸ்டிபிஐ, மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பாக அதற்கு கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது. இந்நிலையில் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு பலியிடும் பிரச்னையில் நீதிமன்றம் மூலம் தீர்வு காணுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் நவாஸ் கனி எம்பி நேரில் சென்று ஆய்வு செய்தார். இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,"மதுரை சிக்கந்தர் மலை தர்கா விவகாரம் தொடர்பாக இன்று நேரில் சென்று கள ஆய்வு செய்தோம். மதுரை மாநகர காவல் ஆணையரை சந்தித்து பிரச்சனையின்றி சுமுகமாக கடந்த காலங்களில் எப்படி இருந்ததோ அதேபோல நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களும் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் பேசியிருக்கிறோம். நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அங்கு தர்காவும், காசி விஸ்வநாதர் ஆலயமும் உள்ளது. தர்காவிற்கு அனைத்து மதத்தினரும் சென்று வருகிறார்கள்.எனவே தேவையற்ற அசோகரிகத்தை அங்கு வரும் மக்களுக்கு ஏற்படுத்தாமல் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வலியுறுத்தி உள்ளோம்.
இது தொடர்பாக காவல்துறை ஆணையரிடம் பேசிய போது உணவு கொண்டு செல்வதற்கு தடை இல்லை ஆடு கோழி எடுத்து செல்வதற்கு இருக்கக்கூடிய தடை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்று விளக்கினார்.சமைத்த அசைவ உணவை எடுத்துச் செல்ல தடை இல்லை என காவல் ஆணையர் கூறியதையடுத்து சமைத்த அசைவ உணவை எடுத்துச் சென்று மக்கள் உண்டனர். விரைவில் அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு கடந்த காலங்களில் இருந்தது போன்று மக்கள் சிரமம் இன்றி தர்காவிற்கு சென்று வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications