மதுரையில் ஆதரவாளர்களுடன் திடீர் மீட்டிங்! என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்?
மதுரை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இன்று நடத்திய ரகசிய மீட்டிங் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சுமார் ஒரு மணி நேரம் பிரபல ஹோட்டல் ஒன்றில் தென் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
இடைத் தேர்தல் முடிவுகள் Live: 29 சட்டசபை, 3 லோக்சபா தொகுதிகள் இடைத் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை
கதவுகள் மூடப்பட்ட நிலையில் உள் அரங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு செய்தியாளர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.
பசும்பொன் பயணம்
கடந்த சனிக்கிழமை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு சென்று ஓ.பி.எஸ். மரியாதை செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மனைவியின் துக்க திதி காரணமாக அவர் அன்று அங்கு செல்லவில்லை. இந்நிலையில் இன்று காலை மதுரை வந்த ஓ.பி.எஸ்., மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், பசும்பொன் சென்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
மதுரையில் ஓய்வு
அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மதுரையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் பிற்பகல் ஓய்வெடுக்க வந்த அவர் அங்கிருந்த கூட்ட அரங்கில் வைத்து தென் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனையை தொடங்கினார். சரியாக ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி உள்ளிட்ட இன்னும் சில தென் மாவட்ட அதிமுக முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
முல்லைப் பெரியாறு
இந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு திரண்டிருந்த கீழ்மட்ட நிர்வாகிகள் ஓ.பி.எஸ். முக்கிய முடிவெடுக்கப் போகிறார் என கொளுத்திப் போட்டுள்ளனர். இதனால் அந்த இடம் மேலும் பரபரப்பானது. இந்நிலையில் கூட்டத்தை முடித்துக்கொண்டு சிரித்த முகத்துடன் அங்கிருந்து வெளியேறிய ஓ.பி.எஸ்., முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் 5 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து பேசப்பட்டதாக பேட்டியளித்தார்.
உட்கட்சி விவகாரம்
மேலும், இதற்கான தேதி மற்றும் நாளை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசித்த பிறகு அறிவிக்கப்படும் எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார். இதனிடையே முல்லை பெரியாறு அணை விவகாரத்தை தாண்டி அந்தக் கூட்டத்தில் வேறு சில உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது. விரைவில் இது குறித்த தகவல்கள் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.