முல்லை பெரியாறு விவகாரம்: அதிமுக சீனியர்களுடன் மதுரையில் ஓபிஎஸ் மீட்டிங்! திமுக மீது குற்றச்சாட்டு
மதுரை: முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்கப்படும் விவகாரத்தில் கேரள அரசின் இடையூறுகளை கண்டும் காணாமல் கடந்து செல்கிறது திமுக தலைமையிலான தமிழக அரசு என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் மதுரையில் இன்று ஆலோசனை நடத்தினார்.
தென்மாவட்ட அதிமுக நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் திண்டுக்கல் தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், செல்லூர் ராஜு திண்டுக்கல் சீனிவாசன் நத்தம் விஸ்வநாதன் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்கள் சந்திப்பு
இக் கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திமுகவுக்கு எதிராக அதிமுக விரைவில் போராட்டம் நடத்தப்படும். அது குறித்த கூடுதல் விவரங்கள் இன்று மாலை அறிவிக்கப்படும்.

ஜெயலலிதா காலம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க ஜீவாதார உரிமையை பெற்று தந்துள்ளார். மேலும்142 அடி நீரை தேக்குவதற்கான அரசாணையையும் வெளியிட்டார். அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து மூன்று முறை 142 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. இந்த அணையின் நீரால் தமிழகத்தின் ஐந்து தென்மாவட்டங்கள் பயன்பெறுகின்றன.

திமுக அரசு கண்டு கொள்ளவில்லை
அணையில் 142 அடி தண்ணீரை தேக்க அதற்கு கேரள அரசு பல்வேறு வகையிலும் தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது. ஆனாலும் கேரள அரசின் இடையூறுகளைத் திமுக தலைமையிலான தமிழக அரசு கண்டும் காணாமல் உள்ளது' என்றார்.

ஓபிஎஸ் மீட்டிங்
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியை விட்டு நீக்க சொன்னதால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பஷீர் இன்றைய தினம் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சுடன் பசும்பொன்னில் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் மதுரையில் இன்று ஆலோசனை நடத்தினார். இது முல்லைப் பெரியாறு தொடர்பான ஆலோசனை என்று கூறப்படுகிறது. இதன்பிறகுதான் நிருபர்களிடம் இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications