இப்படியும் நடக்குமா..கல்லூரி மாணவர் சேர்க்கையில் கல்லா கட்டும் நூதன மோசடி! பெற்றோர்களே உஷார், உஷார்
மதுரை: இப்படியெல்லாம் மோசடிகள் நடக்குமா என்று யோசிக்கும் அளவுக்கு நூதன மோசடிகளை தமிழ்நாடு பார்த்து வருகிறது. இது கல்லூரி அட்மிஷன் காலம் என்பதால், அதை வைத்தும் புது வகை மோசடி அரங்கேறியுள்ளது.
அதில் ஒரு கும்பலை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த சம்பவம் எல்லோருக்குமே ஒரு பாடமாகும்.
மக்கள் உஷாராக இருக்க இந்த சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ளலாம்.

போலி பேஸ்புக் முகவரி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த திரளியில் உள்ளது அன்னை பாத்திமா கேடரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரி. இந்த கல்லூரி பெயரில் போலியாக திடீரென சமூக வலைத்தளத்தில் முகநூல் பக்கம் ஓபன் செய்யப்பட்டுள்ளது. இதை அறியாமல், இந்த கல்லூரிகளில் சேர விரும்பிய மாணவர்கள், அங்கே கேட்ட தங்களைப் பற்றிய விவரங்களை சமர்ப்பித்துள்ளனர்.

வேறு கல்லூரிகளில் கமிஷன்
இந்த விவரங்களை சேகரித்த மோசடி கும்பல், சிஇஓ, அல்ட்ரா உள்ளிட்ட பல்வேறு தனியார் கல்லூரிகளுக்கு கொடுத்துள்ளன. அந்த மாணவர்களை அந்த கல்லூரிகள் சேர்த்துக் கொண்டன. சேர்க்கப்படும் ஒரு மாணவருக்கு குறைந்தது 40,000 முதல் 50,000 வரை கமிஷனாக பெற்றுள்ளது ஃபேக் ஐடி பேஸ்புக் கும்பல்.

இரண்டு கோடி மோசடி
ஒன்றல்ல, இரண்டல்ல, சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இப்படி மோசடி நடந்துள்ளது. மோசடி செய்த நபர் அன்னை பாத்திமா கல்லூரியில் பணியாற்றிய முன்னாள் பேராசிரியர் அனுப்பானடி பகுதியை சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த மதுரை ஜி ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சபரீசன் ஆகிய இருவரும் என தெரியவந்தது.

விசாரணை தீவிரம்
இதனைத் தொடர்ந்து கல்லூரி சேர்மன் ஷா கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மதுரை மாவட்ட காவல் எஸ்பி பாஸ்கரன் உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் ஏடிஎஸ்பி ராஜேஸ்வரி தலைமையிலான தனிப்படையினர் மோசடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இணையதளத்தை பாருங்கள்
பெற்றோர்கள் இதுபோன்ற மோசடி நபர்களை கண்டு ஏமாற வேண்டாம் என காவல்துறையும் மற்றும் கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஏதாவது சந்தேகம் இருந்தால் உண்மையான கல்லூரி நிர்வாகத்தின் இணையதளத்தை சரிபார்த்த பின்னரே கல்லூரியில் சேர விண்ணப்பிக்க பணம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இதுபோன்ற மோசடி நபர்களை கண்டு பிடித்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்கும் காவல்துறைக்கும் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications