தமிழக பாரம்பரியம்! வேட்டி, சட்டையில் வந்து மதுரை மீனாட்சி அம்மனை மனமுருகி வணங்கிய பிரதமர் மோடி
மதுரை: இன்று தமிழகம் வருகை தந்த பிரதமர் மோடி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இன்று இரவு நடைபெற்ற பள்ளியறை பூஜையில் பங்கேற்று மனமுருகி வணங்கினார். அப்போது பிரதமர் மோடி தமிழக பாரம்பரியப்படி வேட்டி சட்டையில் வந்திருந்தார்.
தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்துள்ள பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடைபெறும் என் மண் என் மக்கள் பாதையாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றார். இந்த விழாவிற்காக தாமரை வடிவில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் 5 லட்சம் பேர் அமர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திமுக கூட்டணியை விமர்சித்து பேசினார்.

தொடந்து இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி மாலை 5 மணிக்கு மதுரைக்கு வந்தடைந்தார். மதுரை வீரபாஞ்சானில் சிறு, குறு நடுத்தர தொழிலதிபர்கள் டிஜிட்டல் மாநாட்டில் பங்கேற்றார். இதன் பின்னர் இரவு 7 மணிக்கு பிரதமர் மோடி, பசுமலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு பசுமலை, பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் ரோடு, தெற்குவெளிவீதி வழியாக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்தார் பிரதமர் மோடி. அப்போது பிரதமர் மோடி தமிழக பாரம்பரியப்படி வேஷ்டி சட்டையில் வந்தார். தொடர்ந்து மீனாட்சி அம்மன், சுவாமி சன்னதியில் தரிசனம் செய்தார். அப்போது மீனாட்சி அம்மனை பிரதமர் மோடி மனமுருகி வேண்டிக்கொண்டார்.
இதனை தொடர்ந்து இரவு 9.15 மணிக்கு பள்ளியறை பூஜையில் பங்கேற்றார். மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, மீண்டும் தனியார் ஹோட்டலுக்கு சென்றார். முன்னதாக பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மதுரை நகருக்குள்ளும் இன்று மாலை 6 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மதுரையில் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நாளைய தினம் 28ஆம் தேதி காலை மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடிக்கு செல்கிறார். குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். மாலையில் திருநெல்வேலி சென்று அங்கு பாளையங்கோட்டையில் நடைபெறும் பாஜக மாநாட்டில் பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications