திருப்பரங்குன்றம் விவகாரம்.. ஒரேநாளில் இஸ்லாமியர்கள், இந்து முன்னணி மீது வழக்குப்பதிவு.. முழு விவரம்
மதுரை: திருப்பரங்குன்றத்தில் நேற்று ஒரே நாளில் காவல்துறை அனுமதி இன்றி போராட்டம் நடத்திய இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இந்து முன்னணியினர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி மலைக்கு மேல் கந்தூரி கொடுக்க ஆடுடன் செல்ல முயன்ற இஸ்லாமியர்கள் மீது 4 பிரிவுகளின் கீழும், இந்து முன்னணி சார்பில் காடேஸ்வரா தலைமையில் அனுமதியின்றி ஊர்வலம் சென்றவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் திருப்பரங்குன்றம் மலை எப்போதும் மதநல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. ஏனென்றால் மலைக்கு கீழ் சுப்பிரமணிய சுவாமி கோவிலும், மலை மீது சிக்கந்தர் பள்ளிவாசல் தர்காவும் அமைந்துள்ளது. இரு மதத்தினரும் எந்தவித சிக்கலும் இல்லாமல் முருகனை வணங்கியும், தர்காவில் தொழுகையும் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கடந்த மாதம் சிக்கந்தர் தர்காவில் கந்தூரி நடத்த ஆடு, சேவலுடன் சென்றவர் தடுத்து நிறுத்தப்பட்டார். மலை மீது உயிர்ப்பலி கொடுக்க தடை விதிக்கப்பட்ட போலீசார் கூறியதால், இஸ்லாமியர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தர்காவில் நேற்று முன்தினம் இரவு சந்தனக்கூடு விழா நடைபெற்றது.
இதனால் வழிபாடு நடத்த வந்த இஸ்லாமியர்கள் அனைவரும் பரிசோதனைக்கு பிறகே மலை மீது ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஆடு, கோழி பலியிட்டு சமபந்தி விருந்து நடைபெறும் என்றும், அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று செய்திகள் சோசியல் மீடியாவில் பரவியது. ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலை மீது கந்தூரி நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக திருப்பரங்குன்றம் மலை மீது ஏறும் பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதன்பின் கந்தூர் கொடுக்க முயற்சித்து மலையேற முயன்ற இஸ்லாமியர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதன்பின் இஸ்லாமியர்கள் ஆடுகளை தங்களின் தோளில் போட்டுக் கொண்டு திடீரென பேரணியாக நடந்து சென்று கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து போலீசார் இஸ்லாமியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை மேல் கந்தூரி கொடுப்பதற்காக சென்ற ஐக்கிய ஜமாஅத், எஸ்டிபிஐ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் மீதும், தடை மீறி மலைக்கு செல்ல முயன்றவர்கள் மீதும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அனுமதியின்றி பொதுவெளியில் கூடுதல், ஊர்வலமாக செல்லுதல் மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இதேபோல் இந்து முன்னணி அமைப்பினர் மீதும் திருப்பரங்குன்றம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று மாலை இந்து முன்னணி சார்பில் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் அனுமதி இன்றி சன்னதி தெருவில் ஊர்வலமாக வந்தனர். இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் போலீசார் அனுமதி இன்றி ஊர்வலமாக சென்றது, பொதுவெளியில் கூட்டம் கூடியது, பொது அமைதிக்கு பங்கம் இழைத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications