சீமான் திடீர்னு அந்நியனா மாறுவார்.. திடீர்னு அம்பியா மாறுவார்.. விஜய் மீதான அட்டாக் பற்றி பிரேமலதா
மதுரை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீர் என்று அம்பியாக மாறுவார் திடீர் என்று அந்நியனாக மாறுவார் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். விஜய்யை காட்டமாக சீமான் விமர்சித்ததற்கு இவ்வாறு கூறியுள்ளார் பிரேமலதா.
மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "அரசியலில் யார் எதிரி என்று அறிந்து கொண்டு தான் அரசியல் களத்துக்குள் வருகிறார்கள். அந்த வகையில் விஜய்யும், தமது கருத்தை கூறி உள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம். இன்னும் காலம் இருக்கிறது.

இப்போது தான், விஜய் மாநாடு நடத்தி கொடி ஏற்றி இருக்கிறார். அவர் கடந்து வரவேண்டிய பாதைகள் ஏராளம். எதிர்காலத்தில் அவரது செயல்பாடுகள், முனெடுத்துச் செல்லும் நிகழ்வுகளைப் பொறுத்தே எதையும் கூறமுடியும்." என்றார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பற்றியும், தவெக தலைவர் விஜய் பேச்சு பற்றியும் சீமான் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், "அவர் திடீர் என்று அந்நியனாக மாறுவார்.. திடீர் என்று அம்பியாக மாறுவார். இதற்கு எல்லாம் நான் பதில் கொடுத்துக் கொண்டு இருக்க முடியாது.
ஏன் விஜய்யை முதல்வர் தம்பி என்று சொன்னார், பின்னர் லாரியில் அடிபட்டு இறப்பார் என்று சொன்னார் என்று அவர் தான் பதில் சொல்ல வேண்டும். எப்போதும் ஒரே நிலைப்பாடோடு இருக்க வேண்டும். எல்லாருக்கும் பேசும் சக்தியை கடவுள் கொடுத்திருக்கிறார். அதற்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது." எனக் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், தமது கட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்களை எடுத்துரைத்தார். அப்போது திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் இரு கண்களாக பார்ப்பதாக தெரிவித்திருந்தார் விஜய்.
இதைத்தொடர்ந்து, தவெக தலைவர் விஜய்யை சரமாரியாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அண்மையில், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, "திராவிடம் வேறு, தமிழ் தேசியம் வேறு. இரண்டும் ஒன்று எனக் கூறும் அடிப்படையே தவறு. இது கொள்கை அல்ல. கூமுட்டை. ஒன்று சாலையின் அந்தப் பக்கம் நிற்க வேண்டும் அல்லது இந்தப் பக்கம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி அடித்து செத்துவிட வேண்டியதுதான்." என காட்டமாகப் பேசினார் சீமான்.
அண்ணன் தம்பி உறவு வேறு, அரசியல் கொள்கை வேறு. அரசியலில் எதிரி என வந்துவிட்டால் எதிரி தான். பெற்ற தாய் தந்தை என்றாலும், கடவுளே என்றாலும் கொள்கையில் வேறுபட்டால் எதிரிதான். ரத்த உறவை லட்சிய உறவுதான் மேலானது. குடும்ப உறவை விட கொள்கை உறவுதான் மேலானது." எனக் கூறினார் சீமான்.












Click it and Unblock the Notifications