கடும் வெயில்! வியர்த்து விறுவிறுத்த மக்கள்! உடனே காரை நிறுத்திய திரௌபதி முர்மு! நெகிழ்ச்சியில் மதுரை
மக்களை பார்த்ததும் காரில் இருந்து இறங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
மதுரை: மதுரை மீனாட்சி அ்ம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு விருந்தினர் மாளிகைக்கு சென்ற போது அங்கு வெயிலில் காத்திருந்த மக்களை பார்த்ததும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு காரில் இருந்து இறங்கி இரு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்தார்.
இன்றைய தினம் சிவராத்திரியை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு நடத்தப்படுகிறது. அது போல் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலைக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
இங்கு வெளிநாட்டினர், வெளிமாவட்ட மக்கள், உள்ளூர் மக்கள் என சாரை சாரையாக மக்கள் ஆண்டுதோறும் வருவது வழக்கம். இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மகளுடன் வந்த முர்மு
அதன்படி இந்த விழாவில் தனது மகளுடன் முர்மு கலந்து கொள்கிறார். குடியரசுத் தலைவராக பதவியேற்றதும் முதல் முறையாக டெல்லியிலிருந்து தமிழகம் வந்தார். அவர் மதுரை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதையடுத்து திரௌபதி முர்மு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் சென்றார்.

மீனாட்சியம்மன்
அங்கு மீனாட்சியம்மனையும் சுந்தரேஸ்வரரையும் தரிசித்துவிட்டு அங்கிருந்த சிற்ப கலையை கண்டார். பின்னர் நாய்க்கர் மகால் மண்டபத்தையும் ரசித்தார். முன்னதாக திரௌபதி முர்முவுக்கு பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது. கோயிலில் கொடுக்கப்பட்ட பிரசாதத்தை நெற்றியில் வைத்துக் கொண்ட முர்மு, அங்கிருந்த தெப்பக்குளத்திற்கு முன்பு தனது மகளுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

குங்கும பிரசாதம்
அவருக்கு மீனாட்சி அம்மன் குங்குமமும் அம்மனின் சிலையும் பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் அழகர்கோவில் ரோடு சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு காரில் புறப்பட்டார். அந்த வழியாக குடியரசுத் தலைவர் வருவதை அறிந்த மக்கள் அப்பகுதிகளில் குவிந்தனர். அவரை பார்க்க கூட்டம் கூட்டமாக மக்கள் கூடினர்.

வெயிலில் கால் கடுக்க நின்ற மக்கள்
இதையடுத்து தெற்கு ஆவணி மூல வீதி வழியாக காரில் சென்று கொண்டிருந்த போது அங்கு வெயிலில் கால் கடுக்க நிறைய மக்கள் நிற்பதை கண்டார். உடனே ஓட்டுநரிடம் சொல்லி காரை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். உடனே காரை விட்டு இறங்கிய திரௌபதி முர்மு, அங்கிருந்த மக்களை பார்த்து இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொன்னார். உடனே மக்களும் வணக்கம் கூறி ஆர்ப்பரித்தனர். இதையடுத்து காரில் ஏறி அமர்ந்து தனது பயணத்தை தொடர்ந்தார். முர்முவின் இந்த செயலை பார்த்த மக்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்து வருகிறார்கள். மக்களை பார்த்ததும் முர்மு காரிலிருந்து இறங்குவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் காரில் இருந்து இறங்கியதால் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.












Click it and Unblock the Notifications