கலைஞர் அழைத்தும் அரசியலுக்கு வராத பிடிஆர்.. தோல்விக்கு பின் ஓய்வுக்கு செல்லும் மதுரை திமுகவின் முகம்
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் தோல்வியை தழுவிய முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பொது வாழ்விலிருந்து சில காலம் ஓய்வில் இருக்க போவதாக அறிவித்திருக்கிறார். 2016ல் தொடங்கிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் அரசியல் பயணம், 10 ஆண்டுகள் ஓய்வின்றி தொடர்ந்தது. தற்போது பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
2006ல் திமுக ஆட்சி அமைக்கப்பட்ட பின் அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டவர் பிடிஆர் பழனிவேல் ராஜன். ஆனால் அமைச்சராக பொறுப்பேற்ற ஒரு வாரத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு வந்த போது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அப்போது கலைஞர் உடனடியாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அரசியலுக்கு அழைத்தார்.

கலைஞர் அழைத்து வராத பிடிஆர்
ஆனால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அரசியலுக்கு வர குடும்ப சூழல் காரணமாக தயங்கினார். அப்போது பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அரசியலுக்கு வந்திருந்தால், உடனடியாக மதுரை மத்திய தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு அமைச்சரவையில் இடம்பிடித்திருக்கலாம். ஆனாலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அரசியலுக்கு வரவில்லை.
இதன்பின் 2016 சட்டசபைத் தேர்தலுக்கு முன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுகவில் இணைந்தார். பிடிஆர் பழனிவேல் ராஜன் போட்டியிட்டு வென்ற மதுரை மத்திய தொகுதி அவருக்கு ஒதுக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வென்றது திமுக தலைமையை திரும்பி பார்க்க வைத்தது. நேர்மையான அரசியலை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முன்னெடுப்பார் என்று நம்பினர்.
திமுக ஐடி விங்கை உருவாக்கிய பிடிஆர்
2017க்கு முன்பு வரை சோசியல் மீடியாவில் திமுகவின் ஐடி விங் பலவீனமாக இருந்தது. அதனை பலப்படுத்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் திமுக ஐடி விங் உருவாக்கப்பட்டது. சுமார் 5 ஆண்டுகள் திமுக ஐடி விங் செயலாளராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்த பணிகள் அனைவரையும் புருவத்தை உயர வைத்தது.
ஒவ்வொரு டேட்டா, தகவல், புள்ளி விவரங்கள் அனைத்தையும் விவாதமாக்கினார். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக மிகப்பெரிய அட்டாக்கை சோசியல் மீடியாவில் திமுக ஐடி விங் செய்தது. அதனை ஒருங்கிணைத்தவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான். இன்னொரு பக்கம் அறிவுஜீவிகளின் ஆதரவை தேசிய அளவில் திமுக பக்கம் கொண்டு வந்தார்.
உள்ளூர் அரசியல் மோதல்
இதனால் 2021ல் திமுக ஆட்சி அமைந்த பின் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு நிதியமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. அந்த பொறுப்பே திமுகவினருக்கு அவர் மீது விரக்தியை ஏற்படுத்தியது. உள்ளூர் அரசியலிலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். மதுரை மாவட்ட அமைச்சரான மூர்த்தி மற்றும் மாவட்டச் செயலாளர் தளபதி ஆகியோருடன் மோதினார்.
இன்னொரு பக்கம் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ லீக்கானது. அதன்பின் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் நிதியமைச்சரில் இருந்து ஐடி துறைக்கு மாற்றப்பட்டார். கட்சியிலும், அமைச்சரவையிலும் பிடிஆரின் அதிகாரம் குறைக்கப்பட்டது. 10 ஆண்டுகளில் மதுரை மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டார் என்றே சொல்லலாம்.
பிரச்சாரத்திற்கு வராத உதயநிதி ஸ்டாலின்
அதேபோல் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மாநகராட்சி பொறுப்பாளராக இருந்த போது மதுரையில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டன. ஆனால் மதுரை மாநகராட்சி ஊழல், கட்சியினரை அனுசரித்து செல்லாதது, பிரச்சாரத்தின் போது சுந்தர்.சி-க்கு பதில் அளித்தது உள்ளிட்டவை பின்னடைவாக அமைந்தன. இவருக்காக பிரச்சாரம் செய்ய துணை முதல்வராக இருந்த உதயநிதி ஸ்டாலின் கூட வரவில்லை.
இதனால் திமுக தலைமையுடன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததாக மதுரை மக்களிடையெ விவாதங்கள் எழுந்தன. தற்போது மதுரை மத்திய தொகுதியில் தவெக வேட்பாளர் மதார் பக்ருதீனிடம் சுமார் 19,128 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த முறை 60% வாக்குகளை பெறுவேன் என்று நம்பிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மக்கள் அதிர்ச்சி கொடுத்தனர்.
ஓய்வு ஏன்?
இந்த அதிர்ச்சியில் இருந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால் இன்று வரை மீள முடியவில்லை என்றே பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே அரசியல் பயணத்தில் இருந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஓய்வுக்கு செல்வதாக பார்க்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் களத்தை தயார் செய்யாமல் ஓய்வுக்கு செல்வது விவாதமாகி உள்ளது.












Click it and Unblock the Notifications