சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு.. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ஜாமீன் இல்லை- ஹைகோர்ட் அதிரடி
மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். செல்போன் கடை நடத்தி வந்த இவர்கள் இருவரையும் கொரோனா ஊரடங்கின் போது அதாவது, கடந்த 2020 ஜுன் மாதம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். காவல் நிலையத்தில் போலீசார் அடித்ததில் தந்தை மகன் இருவரும் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் என 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரில் எஸ்எஸ்ஐ ரகுகணேஷ் உள்ளிட்டோர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஜாமீன் கோரி மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடியானது. இதனிடையே, ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஸ்ரீதருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என சிபிஐ, மற்றும் ஜெயராஜ் மனைவி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீதருக்கு ஜாமின் வழங்கினால் தற்போது வேகமாக நடந்து வரும் விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஸ்ரீதர் ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications