சாத்தான்குளத்தில் தந்தை மகனை அடித்து கொன்றவர்கள் இவர்கள்தான்!.. சிறையிலிருந்து நீதிபதிக்கு ஏ1 கடிதம்
மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி ஒரு விசாரணைக்காக போலீஸார் அழைத்து சென்றதாக தெரிகிறது.
போலீஸின் கஸ்டடியில் இருந்த தந்தையும் மகனும் திடீரென உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது தந்தை மகனை போலீஸாரே சித்ரவதை செய்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

10 பேர் கைது
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர். இதில் பால்துரை என்பவர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டார். எனவே ஸ்ரீதர் உள்பட 9 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

திடீர் திருப்பம்
இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கின் திடீர் திருப்பமாக முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் புதிய தலைமுறை சேனலுக்கு கிடைத்துள்ளது.

ஏ2 முதல் ஏ9 வரை
அந்த கடிதத்தில் சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட ஏ2 முதல் ஏ9 வரை உள்ளவர்களே தந்தையையும் மகனையும் அடித்து கொன்றுள்ளனர். இந்த விவகாரத்தில் நான் எதையும் செய்யவில்லை. நான் ஒவ்வொரு வழக்கு விசாரணையின் போதும் உண்மையை பேசி வருவதால் அவர்கள் 8 பேரும் மீது கோபத்தில் உள்ளனர்.

கொலை செய்ய சதி
கடந்த மார்ச் 26 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு தந்தை மகனை அடித்து கொன்றது போல என்னையும் கொலை செய்ய முயற்சித்தனர். மேலும் நீதிமன்றத்தில் வாகனத்தில் அழைத்து செல்லும் போதெல்லாம் அந்த 8 பேரும் சேர்ந்து என்னை தகாத வார்த்தைகளால் திட்டி வருகிறார்கள். எனவே என்னை இனி தனி வாகனத்தில் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல உத்தரவிட வேண்டும். எனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். தந்தை மகன் கொலை வழக்கில் சாட்சியம் அளித்தவர்களில் பெரும்பாலானோர் ஸ்ரீதருக்கு எதிராக சாட்சியம் அளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications