ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது போலீஸ் பொய் வழக்கு பதிவு - ஸ்ரீதருக்கு ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு
மதுரை: சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது காவல்துறையினர் பொய்யான வழக்குகள் பதிவு செய்து துன்புறுத்தியுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சிபிஐ தெரிவித்துள்ளது. 2 பேரின் மீதான நடவடிக்கை ஆய்வாளர் ஸ்ரீதருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை எனவும் சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமின் கொடுத்தால் அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதாகவும் சிபிஐ கூறியுள்ளதால் இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் மரணத்திற்கு நீதிகேட்டு பலரும் போராடிய நிலையில் மாவட்ட எஸ்பி முதல் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் உள்ளிட்ட அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜா உள்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 8 போலீசார் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தந்தை மகன் மரண வழக்கினை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஸ்ரீதர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆய்வாளர் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்திருந்தார்.
சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கிறேன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை விசாரித்த நிலையில் தற்போது சிபிஐ காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கெனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்துவிட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்து உள்ளது. எனக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் தலைமறைவாக மாட்டேன் என்றும், நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன் என்றும் உறுதி கூறுகிறேன். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் இந்த வழக்கு குறித்து சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
முதலில் தொழில்... பிறகு அரசியல்... நிதானமாக அடியெடுத்து வைக்கும் வசந்தகுமார் மகன்..!
அப்போது சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது காவல்துறையினர் பொய்யான வழக்குகள் பதிவு செய்து துன்புறுத்தியுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சிபிஐ தெரிவித்துள்ளது. 2 பேரின் மீதான நடவடிக்கை ஆய்வாளர் ஸ்ரீதருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை எனவும் சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமின் கொடுத்தால் அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனு மீதான விசாரணையை மதுரை உயர் நீதிமன்ற கிளை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.