விஜய்யை பார்க்க வந்தவரின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய பாதுகாவலர்? மதுரை ஏர்போர்ட்டில் பரபர
மதுரை: மதுரை விமான நிலையத்தில், விஜய்க்கு சால்வை போட வந்த தொண்டரை பார்த்து துப்பாக்கியை காட்டி பாதுகாவலர் மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொடைக்கானலில் ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்து விஜய் திரும்பிய நிலையில், அவரை பார்க்க விமான நிலையத்தில் ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்று அறிவித்து அதற்கான பணிகளை செய்து வருகிறார். ஹெச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வரும் விஜய், இது தான் எனது கடைசி படம் என்றும் அறிவித்துள்ளார். ஒருபுறம் படப்பிடிப்பில் நடித்து வரும் விஜய் மறுபுறம் கட்சியை வலுப்படுத்தும் பணிகளையும் செய்து வருகிறார்.

ஜனநாயகன் படப்பிடிப்பில் விஜய்
இந்த நிலையில் தான் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொடைகானலில் ஜனநாயகன் திரைப்பட சூட்டிங்கிற்காக மதுரை விமான நிலையம் வந்து அந்த வழியாக கொடைக்கானல் சென்றார். அப்போது விஜய்க்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த விஜய் நான் படபிடிப்புக்காகவே செல்கிறேன். கட்சி பணிக்காக வரவில்லை. நீங்க யாரும் என்னை பின் தொடர வேண்டாம் என்று கூறியிருந்தார்.
எனினும் மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் திரண்டு பூக்கள் தூவி உற்சாகத்துடன் வரவேற்றார். தொடர்ந்து விஜய் கொடைக்கானலில் தாண்டிக்குடியில் நடந்த ஜனநாயகன் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். தொடர்ந்து சூட்டிங் முடிந்ததையடுத்து இன்று அவர் மதுரை விமான நிலையத்துக்கு காரில் வந்து, அதன்பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்திருந்தார்.
துப்பாக்கியை தலையில் வைத்த பாதுகாவலர்
விஜய் வருவதினை அறிந்த தவெக தொண்டர்கள் அங்கு அதிகளவில் குவிந்தனர். விஜய்யை பார்க்க வேண்டும் என்று திரண்டிருந்த தொண்டர்கள் விஜய் வந்ததும் அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். விஜய்யும் காரில் இருந்து இறங்கியதும் தொண்டர்களை நோக்கி கையசைத்தார். விஜய்யை சுற்றிலும் பாதுகாப்புக்காக பாதுகாவலர்கள் நின்றனர்.
அப்போது மதுரையை சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த இன்பராஜ் என்பவர் விஜய்க்கு சால்வை அணிவிக்க வேண்டும் என்று நினைத்து திடீரென பாதுகாவலர்களை தாண்டி விஜய்யை நெருங்கி வந்தார். அவர் சால்வையை விரிக்க நினைக்கும் நேரத்தில் பாதுகாவலர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர் தலை மீது வைத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
இதையடுத்து மற்ற பாதுகாவலர்கள் பலரும் இன்பராஜை தடுத்து நிறுத்தினர். விஜய்க்கு சால்வை போட வந்த தொண்டரை பார்த்து துப்பாக்கியை காட்டி பாதுகாவலர் மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விஜய்யை தாக்க வந்ததாக நினைத்து துப்பாக்கியை காட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருந்த போதிலும் துப்பாக்கியை காட்டி மிரட்டுவது என்பது மிகவும் அபாயகரமான செயல் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்தும் இணையத்தில் பரவி வருகிறது.
இதற்கிடையே தன் மீது துப்பாகி வைக்கப்பட்டது குறித்து இன்பராஜ் பேசுகையில், விஜய்யை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். அது நடந்துவிட்டது. என் மீது துப்பாக்கி வைக்கப்பட்டதற்கு எல்லாம் நான் கவலைப்படவில்லை. விஜய்க்கு எதுவும் ஆகவில்லை. அது போதும் என்று அவர் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications