அடுத்து மலைகளின் மாநாடு.. கடல், ஆறுகளுக்கும் மாநாடு நடத்தப்படும்.. சீமான் அறிவிப்பு!
மதுரை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தருமபுரியில் மலைகளின் மாநாடு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். மாடு, மரங்களுக்கான மாநாட்டை தொடர்ந்து மலைகளுக்கான மாநாட்டை தருமபுரியிலும், கடல் அம்மா மாநாட்டை தூத்துக்குடியிலும், தண்ணீரின் மாநாட்டை தஞ்சாவூரிலும் நடத்த சீமான் திட்டமிட்டுள்ளார்.
இன்று மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "படிக்கும் பிள்ளைகளுக்கு விடுமுறை விட்டு கூட்டம் நடத்தும் அளவிற்கு அந்த திட்டம் என்ன செய்து விட்டது? இதுபோன்ற கொடுமைகள் எல்லாம் செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடல் ஆட்சி. எங்கள் ஊரில் இதேபோல் இத்திட்டத்தில் மனுக்களை பெற்று அதை ஆற்றில் வீசினார்கள்.

பாஜக, ஆர்எஸ்எஸ் கோட்பாடு என்னவோ அப்படித்தான் பாஜக இயங்கும். ஆர்எஸ்எஸ் இல் பயிற்சி எடுத்தவர்கள் அந்த சித்தாந்தப்படி தான் இயங்குவார்கள். பாஜகவின் கொள்கைகளுடன் ஒத்துப்போய் ஒரு ஆட்சி நடக்கிறது என்றால் அது திமுக தான். ஆப்பரேஷன் சிந்தூரை ஆதரித்தது முதல்வர் தான். அதற்கு பிரதிநிதியாக போய் உலக நாடுகளில் பேசியது கனிமொழி தான். குஜராத் கலவரத்தை ஆதரித்து பேசியவர்கள், மணிப்பூர் கலவரத்தை எதிர்த்து பேசுகிறார்கள்.
குஜராத் கலவரத்தை திமுக கட்சி தலைவர்கள் ஆதரித்து பேசினார்கள். ஆனால் அதே கட்சியால் நடைபெற்ற மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்த்து போராடினார்கள். அப்போது கூட்டணியில் இருந்ததால் ஆதரித்தீர்கள் இப்போது கூட்டணியில் இல்லாததால் எதிர்த்தீர்கள். உங்களுக்கு என ஒரு நிலைப்பாடு இல்லை. எல்லா வழியிலும் பாஜகவோடு நட்போடு இருப்பது நீங்கள் தான். இல கணேசன் மறைவிற்கு மோடி செய்ய வேண்டிய மரியாதையை முதல்வர் செய்ததற்கு காரணம் என்ன? மூப்பனார் நினைவு நாளுக்கு வந்த நிர்மலா சீதாராமன் இதற்கு வர முடியவில்லை. இவர்கள் நெருக்கமாக இருப்பதற்கு இதை விட வேறு சான்று வேண்டும்?
மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடாக திருச்சி மாநாடு அமையும். ஆடு, மாடு மாநாடு தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெற உள்ளது. மலை வளமே மண்வளம் எனும் நோக்கில் தருமபுரியில் மலைகளின் மாநாடு, தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு, தஞ்சாவூரில் தண்ணீரின் மாநாடு நடைபெறும். ஐம்பெரும் ஆற்றல் இல்லாது எந்த உயிரும் இல்லை. நாங்கள் மனிதர்களுக்கு மட்டுமான அரசியலாக இல்லாமல் எல்லா உயிர்களுக்குமான அரசியலாக பார்க்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார் சீமான்.












Click it and Unblock the Notifications