காளியம்மாள் போனால் போகட்டும்! நாதகவுக்கு இது களையுதிர்காலம்! சீமான் பொளேர்
மதுரை: காளியம்மாள் நாதகவில் இருந்து விலகுவது என்பது இலையுதிர் காலம் போல் எங்கள் கட்சிக்கு களையுதிர்காலம் போன்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில் இலையுதிர் காலம் இருக்கிறதல்லவா. அது போல் எங்கள் கட்சிக்கு களையுதிர்காலம் போன்றது காளியம்மாள் விலகல் என்பது! (காளியம்மாள் குறித்த கேள்விக்கு அவரது பெயரை கூறாமல் தங்கை என்றே சீமான் பதில்)

நாதகவில் இருப்பதற்கும் விலகுவதற்கும் தங்கை காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. கட்சியில் இருந்து யார் வேண்டுமானாலும் செல்லலாம், அது அவர்களின் முடிவு, உரிமை. காளியம்மாள் போனால் போகட்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் என் தாய்மொழியை படிக்க முடியாத சூழலை ஏற்படுத்திவிட்டு இந்தி படி என்றால் எப்படி? எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம் என்றார்கள். ஆனால் அப்படி எதுவுமே இல்லையே. கொள்கை மொழிதானே இருக்கிறது. பன்மொழி பயில்க என்றுதானே வர வேண்டும். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநில மக்களுக்கும் அவரவர் தாய்மொழி கொள்கை மொழிதான். ஆங்கிலம் ஒரு பயன்பாட்டு மொழி. விரும்பினால் எந்த மொழியையும் கற்கலாம் என்பதுதான் கொள்கை மொழி. புதிய கல்வி கொள்கையை திமுக எதிர்க்கிறது என்று சொல்வது நாடகம். புதிய கல்வி கொள்கையின் பெயரை மட்டும் மாற்றி இல்லம் தேடி கல்வி திட்டத்தை கொண்டு வந்தார்கள். மும்மொழி திட்டத்தில் எம்மொழி எங்கே என்ற கேள்வி வருகிறது. மருத்துவம், கல்வி என எல்லாவற்றையும் மத்திய அரசே எடுத்துக் கொண்டால் எதற்குதான் மாநிலம் இருக்கிறது? அந்த மாநிலத்திற்கு என்னதான் உரிமை? என சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். சீமான் மீது இருந்த அதிருப்தியால் அவர்கள் விலகுவதாக அறிவித்துள்ளனர். அதிலும் பெரியார் குறித்து சீமான் கடுமையாக விமர்சித்திருந்ததை சொந்த கட்சியினரே ஏற்காமல் மாற்றுக் கட்சியில் இணைந்துவிட்டனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், அக்கட்சியில் இருந்து விலகி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போகிறார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால் இதை காளியம்மாள் மறுத்தார். இந்த நிலையில் அடுத்த மாதம் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் நடைபெறும் உறவுகள் சங்கமம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளியம்மாளின் பெயர் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் காளியம்மாளின் கட்சி பொறுப்பு குறிப்பிடப்படாமல் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள். எனவே காளியம்மாள் நாதகவில் இருந்து விலகிவிட்டதாகவே கருதப்படுகிறது.
இதுகுறித்து காளிம்மாள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் முடிவை விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார். ஆனால் அவர் எந்த கட்சியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தவெகவில் அவர் இணைவதாக இருந்தால் ஆதவ் அர்ஜுனன், நிர்மல் குமார் இணைந்த போதே இணைந்திருக்கலாம். எனவே காளியம்மாளின் சாய்ஸ் திமுகவா இல்லை காங்கிரஸா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications