தலித் வாக்குகளை பிரிக்கும் தவெக.. முக்குலத்தோர் வாக்குகளுக்கும் செக்.. சீமானுக்கு சவால் இருக்கு!
சிவகங்கை: காரைக்குடி தொகுதியில் கணிசமான அளவிற்கு வசித்து வரும் தலித் சமூக வாக்குகளை தவெகவும், முக்குலத்தோர் வாக்குகளை அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டியும் பிரிக்கிறார்கள். இதனால் காரைக்குடியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகப்பெரிய சவாலை சந்திப்பார் என்று பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். லோக்சபா தேர்தலில் காரைக்குடி தொகுதியில் மட்டும் நாதகவுக்கு சுமார் 28 ஆயிரம் வாக்குகள் கிடைத்தது. இதன் காரணமாகவே காரைக்குடி தொகுதியில் சீமான் களமிறங்க முடிவு எடுத்தார். கடந்த 6 மாதங்களாகவே நாதகவினர் காரைக்குடி தொகுதியில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

காரைக்குடி தொகுதியில் முக்குலத்தோர் சமூக மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பின் தேவேந்திர குல வேளாளர், இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இதில் தவெக வேட்பாளர் பிரவு காரைக்குடி மற்றும் தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல ஆதரவை பெற்றுள்ளார். கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், விஜய் செல்வாக்கு காரணமாக தலித் வாக்குகளையும் பிரிக்கிறார்.
மறுபக்கம் அதிமுக கூட்டணி சார்பாக அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி களத்தில் இருக்கிறார். முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்த சமூக வாக்குகளை கணிசமாக அறுவடை செய்வார் என்று பார்க்கப்படுகிறது. மறுபக்கம் சிட்டிங் காங்கிரஸ் எம்எல்ஏ-வான மாங்குடியும் தனி செல்வாக்குடன் இருந்து வருகிறார்.
ஆனால் சீமானுக்கு இருக்கும் பெரிய பலம், அவரை எந்த சாதிக்குள்ளும் அடைக்க முடியாதது தான். இது கிராமப் புறங்களில் நன்றாகவே எடுபடுகிறது. கிராமங்களில் இருந்து பலரும் சீமான் சட்டமன்றம் செல்ல வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. அதற்கேற்ப நாதகவினர் காரைக்குடி தொகுதியில் இருக்கும் ஒவ்வொரு கிராமத்திலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இருந்தாலும் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகள் சீமான் பக்கம் வந்தால் மட்டுமே வெற்றி உறுதியாகும். இதனால் சீமானின் பிரச்சாரம் மற்றும் நாதகவினர் தேர்தல் பணிகளை பொறுத்தே காரைக்குடி தொகுதியின் வெற்றி தெரியும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications