இரை போட்டால் காக்கா வரும்.. அப்படித்தான் பாஜக கூட்டம்.. விட்டு விளாசிய அதிமுக சீனியர் செல்லூர் ராஜூ
மதுரை: அதிமுகவை துரும்பு அளவு விமர்சித்தால் தூண் அளவு பதிலடி கொடுப்போம் என பாஜகவுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், வி.பி.துரைசாமி எல்லாம் அதிமுகவை பற்றி பேசலாமா என்றும் இதைவிட ஒரு கொடுமை நாட்டில் வேறு எதுவுமே இல்லை எனவும் செல்லூர் ராஜூ மிகவும் நொந்துகொண்டார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மத்திய அரசின் பதவிக்காக அரசியல் செய்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.

அதிமுக -பாஜக கூட்டணி
அதிமுக -பாஜக கூட்டணியில் நாளுக்கு நாள் உரசல் அதிகமாகிக் கொண்டே வருவதால் அரசியல் களத்தில் அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. பாஜகவுக்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசிய விவகாரம் இப்போது மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பாஜக பற்றி பொன்னையன் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என ஓ.பி.எஸ். விளக்கமளித்து சமாளித்த 24 மணி நேரத்திற்குள் பாஜக பற்றி மேலும் ஒரு அதிமுக முன்னாள் அமைச்சர் விமர்சித்துள்ளார்.

பாஜகவுக்கு எச்சரிக்கை
இன்னும் சொல்லப் போனால் அவர் விமர்சிக்க மட்டுமில்லை, எச்சரிக்கவும் செய்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ, அதிமுக துரும்பு அளவு விமர்சித்தால் தூண் அளவு பதிலடி கொடுப்போம் என பாஜகவை எச்சரித்திருக்கிறார். மேலும், வி.பி.துரைசாமி எல்லாம் அதிமுகவை பற்றி பேசலாமா என்றும் இதைவிட ஒரு கொடுமை நாட்டில் வேறு எதுவுமே இல்லை எனவும் கிண்டல் அடித்துள்ளார்.

காக்கா கூட்டம்
எப்பவுமே தமிழகத்தில் அதிமுக-திமுக ஆகிய கட்சிகள் முக்கியமானது. இவற்றுக்கு ஆயிரக்கணக்கான கிளைகள் உள்ளன. அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சியாக வீற்றிருக்கிறது. ஒரு கட்சி எங்கையோ ஒரு கூட்டம் போட்டால், ஆயிரம் பேர், ரெண்டாயிரம் பேர் கூடத்தான் செய்வார்கள். அது பெரிய விஷயம் இல்லை. நாங்க காக்கா கூட்டம் இல்லை. கொள்கைக் கூட்டம். இரைகளைப் போட்டால் காக்கா கூடும். இரை முடிந்ததும் பறந்துவிடும் சார். இவ்வாறு செல்லூர் ராஜு தெரிவித்தார்.

பதவிக்காக அரசியல்
எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜனை போல் தனக்கும் மத்திய அரசிடம் பதவி பெறுவதற்காக அண்ணாமலை அரசியல் செய்து வருவதாக சிரித்துக்கொண்டே சீரியஸான விமர்சனத்தை முன் வைத்துள்ளார் செல்லூர் ராஜூ. கூட்டணிக் கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பவரையே, செல்லூர் ராஜூ இந்தளவுக்கு விமர்சித்திருப்பது பாஜக-அதிமுக கூட்டணி இடையே உரசல் அதிகமாகியிருப்பதை தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

நான் பேசக்கூடாதா?
வி.பி.துரைசாமி அதிமுகவை விமர்சிக்கும் போது, மாவட்டச் செயலாளர் என்ற முறையில் நான் ஏன் பேசக்கூடாது என செல்லூர் ராஜூ வினவினார். இவரது இந்த விமர்சனத்தால் அதிமுக- பாஜக தலைமை இடையே தர்ம சங்கடமான சூழல் உருவாகியுள்ளது. அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்துக்கு, பாஜக தரப்பில் கரு.நாகராஜனோ அல்லது வேறு யாருமோ பதில் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications