அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது தற்செயலானது! சப்பைக் கட்டு கட்டும் செல்லூர் ராஜு!
மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை , அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்செயலாக சென்றுதான் சந்தித்தார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியிருப்பதாவது: கூட்டணி என்பது எடப்பாடி பழனிசாமி சொன்னதுதான் நிதர்சனமான உண்மை. அமித்ஷா அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
அதிமுகவை எப்படி வழிநடத்த வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். அமித்ஷாவை ஏன் சந்தித்தீர்கள் என்பதை செங்கோட்டையனிடம் கேளுங்கள். அதிமுகவில் செங்கோட்டையன் மூத்த நிர்வாகி, மதிக்கக் கூடியவர், மதிக்கப்பட்டவர்.

அவரது கருத்தை சொல்லியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் சொல்லிவிட்டு சென்றாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. செங்கோட்டையன் கூட்டணி தொடர்பாக பேசினார் என செய்தி வந்ததா?
அதிமுக பிரியவில்லை. நாங்கள் அனைவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். ஒன்றிரண்டு பேர் போவது எல்லாம் வழக்கமான ஒன்றுதான். ஒரு தலைவர் சென்றால் அவர் பின்னால் 4 பேர் இருப்பார்கள். தவெக விமர்சனத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
கருத்துக் கணிப்பு எல்லாம் தூள் தூளாக மாறிவிடும். மக்கள்தான் எஜமானர்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள், 1000 கருத்துக் கணிப்புகள், விமர்சனங்கள் வந்தாலும் 2026ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர். எங்கள் கொள்கையில் நாங்கள் சரியாகதான் உள்ளோம்.
எடப்பாடி பழனிசாமி மிகவும் சரியாக உள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி தற்செயலாக சென்றுதான் சந்தித்தார். எங்களை பார்த்து திமுகவுக்கு பயமில்லை என்றால் எங்களை ஏன் பேரவையில் இருந்து வெளியேற்ற வேண்டும்? என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த 25 ஆம் தேதி இரவு திடீரென டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
இருவரும் ஒன்றரை மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தினர். டெல்லிக்கு எதற்காக செல்கிறீர்கள் என பத்திரிகையாளர்கள் கேட்ட போது கூட டெல்லியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வதாகவே கூறியிருந்தார். ஒவ்வொரு முறையும் அதிமுக- பாஜக கூட்டணி எழுமா என நிருபர்கள் கேட்கும் போதெல்லாம் அதெல்லாம் கிடையாது என உறுதியாக தெரிவித்தார்.
மேலும் அதிமுக பொதுக் குழுவில் எடுத்த முடிவின் படி இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றே சொல்லி வந்தார். இந்த நிலையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். யாருக்கும் தெரியாமல் சந்திக்க வேண்டி, 3 கார்களில் மாறி மாறி பயணம் செய்தார். இதன் மூலம் 2026 ஆம் ஆண்டு அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications