கடன் மோசடி என பொத்தாம் பொதுவாக பேசி... கடன் பெற்ற விவசாயிகளை கொச்சைப்படுத்தக் கூடாது -செல்லூர் ராஜூ
மதுரை: கூட்டுறவு சங்கங்களில் கடன் மோசடி என பொத்தாம் பொதுவாக பேசுவதை திமுக அரசு கைவிட வேண்டும் என்றும் அப்படி என்ன முறைகேடு நடந்துவிட்டது எனவும் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வினவியுள்ளார்.
கூட்டுறவு சங்கங்களில் கடன்பெற்ற விவசாயிகளையும், பொதுமக்களையும் குற்றம் சுமத்தி பேசும் போக்கை திமுக அரசு கைவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கூட்டுறவு சங்கங்களில் நகை/ பயிர் கடன் மோசடி நடைபெற்றுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறி வரும் நிலையில் அவருக்கு சவால் விடுக்கும் வகையில் செல்லூர் ராஜூ தனது தரப்பு கருத்தை அறிக்கையாக பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது;

வேளாண் பெருமக்கள்
''வேளாண் பெருமக்கள் புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிப்பு அடையும் போது, பயிரிட்ட வேளாண் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் நஷ்டத்திற்கு உள்ளாகும் போது விவசாயிகளின் சிரமத்தில் பங்குக் கொள்ளும் வகையில் அரசு கூட்டுறவு சங்கங்கள் மூலம் வாங்கிய கடன்களுக்கு வட்டி தள்ளுபடி, கடன் தள்ளுபடி என நிலைமைக்கு தக்கவாறு அரசு முடிவெடுக்கும்.''

2 ஆண்டுகள்
''கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகினர். எனவே தான் 'விவசாயக் கடன் தள்ளுபடி' என அதிமுக அரசு அறிவித்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டது. மேலும், வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பு தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக தான் வெளியிடப்பட்டது.''

தேர்தல் வாக்குறுதி
''திமுக தேர்தல் வாக்குறுதியிலும், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் பேசும் போது குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. இந்த பேச்சை நம்பி 5 சவரன் வரை குடும்பத்தில் உள்ள அனைவரும் நகைகளை வங்கிகளில் வைத்து கடன் பெற்றனர். இந்தக் குழப்பத்திற்கு காரணமே திமுக தேர்தல் வாக்குறுதி தான்.''

கொச்சைப்படுத்தி
''அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துவிட்டு தற்போது பல நிபந்தனைகளை விதித்து, நகைக்கடன் வழங்கியதில் முறைக்கேடுகள் நடந்துவிட்டதாக கூட்டுறவு சங்கங்கள் மீதும் அதன் பணியாளர்கள் மீதும் , கடன் பெற்ற பொதுமக்கள் மீது குற்றம் சுமத்தி பேசுவது அனைவரையும் கொச்சைப்படுத்தும் வகையில் இருக்கிறது.''

கூட்டுறவு
''நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை நிறைவேற்ற முடியாத நிலையில், மற்றவர்கள் மேல் பழிபோடுவது யார்? கூட்டுறவே நாட்டுயர்வு என்ற உன்னத நோக்கில் கூட்டுறவு இயக்கம் இன்று தமிழகம் முழுவதும் வெற்றிக்கரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.''

திமுக அரசு
''வேளாண் பயிர்ரகடன் வழங்கியதிலும் நகைக்கடன் வழங்கியதிலும் ஏதேனும் தவறுகள் நடந்திருந்தால், அந்த தவறுகளுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அனைத்து சங்கங்களின் மீது பொதுவாக பழி சுமத்தக்கூடாது. கிராமங்களின் மூலாதாரமான வேளாண்மை சிறந்த முறையில் இயங்குவதற்கு அடித்தளமாக விளங்கும் கூட்டுறவு சங்கங்கள் தொடர்ந்து நல்ல முறையில் இயங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திமுக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications