தீபத் தூண் சாய்ந்திருக்கா? ஆகமவிதிகளா? ஆதாரத்தை காட்டச் சொன்ன நீதிபதிகள்! கையை பிசைந்த தேவஸ்தானம்
மதுரை: திருப்பரங்குன்றம் கோயில் தீபத் தூண் சாய்ந்து இருக்கிறதா, அதில் விளக்கேற்றினால் ஆகமவிதிகளுக்கு எதிரானது என்றால் அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் என கோயில் நிர்வாகத்திடம் மதுரை கிளை நீதிபதிகள் கேட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி மதுரை எழுமலை ராமர் ரவிக்குமார், பரமசிவம், அரசுபாண்டி, கார்த்திகேயன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுச் செய்திருந்தனர். இவற்றை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், வழக்கமான இடங்களுடன் தீபத்தூணிலும் தீபம் ஏற்ற டிசம்பர் 1 அன்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசும், கோயில் நிர்வாகமும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தன. நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்த இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, திருப்பரங்குன்றம் மலையில் கந்தூரி விழாவுக்கு தடை கோரிய வழக்கில், தர்கா நிர்வாகம் சந்தனக் கூடு உருஸ் திருவிழாவை மட்டும் 50 பேர் பங்கேற்புடன் நடத்தலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
விழாவில் விலங்குகள் பலியிடுவது, இறைச்சி, அசைவ உணவுகள் சமைப்பது, கொண்டு செல்வது தடை. மலையடிவாரம் முதல் உச்சி வரை இத்தடைகளை அதிகாரிகள் கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.
'50 பேர் பங்கேற்பு' நிபந்தனையை நீக்கக் கோரி தர்கா நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரியது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று இதனை ஏற்க மறுத்தது. தீபத்தூண் வழக்கின்போது இது விவாதிக்கப்படும் என்றும், தர்கா மனு நாளை (இன்று) விசாரிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
அந்த வகையில் இன்றைய தினம் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவில், தீபத் தூண் கோயிலுக்கு மேலே இல்லை, சற்று நகர்ந்திருக்கிறது, எனவே அதில் தீபமேற்றினால் ஆகமவிதிகளுக்கு எதிரானது என்ற வாதத்தை வைத்தனர்.
ஆனால் அந்த இரு நீதிபதிகளும் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால் அப்படி ஒரு ஆகம விதிகளுக்கு எதிரானது என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே உச்ச பிள்ளையார் கோயிலில் இருந்து தூரத்தில் இருக்கும் தீபத் தூணில் தீபம் ஏற்ற ஆகமத்தில் எந்த ஒரு தடையும் இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது விஷயம் மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்றால் தற்போது ஏற்றும் இடமான உச்சி பிள்ளையார் கோயில் இடத்தை விட உயரத்தில் இருக்கும் தீபத் தூணில் தீபம் ஏற்றினால் இன்னும் நிறைய மக்கள் அதை பார்க்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications