பிடிஆர் எங்கே போனாலும் போராடுவோம்! பாஜக சரவணன் எச்சரிக்கை
மதுரை : அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் எங்கு சென்றாலும் பாஜக எதிர்ப்பை பதிவு செய்வோம். அறவழியில் போராடுவோம் எனத் தெரிவித்துள்ளார் பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன்.
Recommended Video
ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்டபோது தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரின் மீது செருப்பு வீசப்பட்டது. சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், இவங்கள எதுக்கு உள்ள விடுறீங்க என பொதுமக்களை பார்த்து அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கேட்டார் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

அமைச்சர் கார் மீது செருப்பு
மதுரை திருமங்கலம் அருகேயுள்ள டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் பி.டி.ஆர் அஞ்சலி செலுத்திவிட்டு காரில் புறப்பட்டபோது, வாக்குவாதம் செய்த பாஜகவினர், அமைச்சரின் கார் மீது செருப்பு வீசினர்.

5 பேர் கைது
இதனையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி அமைச்சரின் காரை பத்திரமாக அனுப்பி வைத்தனர். அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமைச்சரின் கார் மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பாஜக மாவட்ட நிர்வாகிகள் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.

டாக்டர் சரவணன் விளக்கம்
இந்நிலையில், பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் செய்தியாளர்களைச் சந்தித்து இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், "அமைச்சர் பி.டி.ஆர் லட்சுமணனுக்கு அஞ்சலி செலுத்த பாஜகவுக்கு என்ன தகுதி இருக்குனு இங்க வர்றிங்க எனக் கேட்டார். முதலில் அவருக்கு என்ன தகுதி உள்ளது. ஒன்றிய அரசு என சொல்லி பிரிவினைவாதத்தை தூண்டும் அமைச்சர் பி.டி.ஆருக்கு ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்த என்ன தகுதி உள்ளது?

அமைச்சருக்கு சவால்
உயிரிழந்த லட்சுமணனுக்கு நான் வைத்தியம் செய்துள்ளேன். அவர் குடும்பத்திற்கு என்னைத் தெரியும். கட்சியை வைத்து வெற்றி பெற்றவர் பிடிஆர். தனியாக நின்று செல்வாக்கோடு வெற்றி பெற்றவர் இல்லை. அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடட்டும். நானும் போட்டியிடுகிறேன். யார் வெற்றி பெறுவார்கள் என பார்ப்போம். இதை சவாலாகவே விடுகிறேன்.

அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்
இவங்கள எதுக்கு உள்ள விடுறீங்க என பொதுமக்களை பார்த்து அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கேட்டார். இவர் பேச்சை கேட்டு திமுகவே கொதித்து போய் உள்ளது. நிதி அமைச்சரை அமைச்சர் பொறுப்பிலிருந்தே நீக்க வேண்டும். பண்பாடு இல்லாத அமைச்சர் பி.டி.ஆர். மாண்பற்ற தலைக்கனம் பிடித்த அமைச்சர் பிடிஆர், தரம் தாழ்ந்து நடந்து கொண்டார்.

பிடிஆர் எங்கு போனாலும்
நாங்கள் அந்தச் சம்பவத்தை செய்தோம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அங்கே ஏராளமானோர் கூடியிருந்தனர். கார் மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக நீங்கள் சட்டரீதியாக எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். நாங்களும் சட்ட ரீதியாக அணுகுகிறோம். பி.டி.ஆர் எங்கு சென்றாலும் பாஜக எதிர்ப்பை பதிவு செய்வோம். அறவழியில் போராடுவோம்.

நடந்திருப்பதே வேறு
நிதி அமைச்சர் பாஜகவினர் மீது கை ஓங்கி இருந்தால் வேறு மாதிரியாக இருந்திருக்கும். பாஜகவுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு இருப்பதால் இப்படி நடந்து கொண்டுள்ளார். சண்டை மூட்டிவிடும் கட்சி பாஜக அல்ல. அதிமுகவினரை பார்த்து வெளியே போகச் சொல்லாதவர், பாஜகவினரை மட்டும் காழ்ப்புணர்ச்சியோடு வெளியே போகச் சொல்லியுள்ளார்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications