ரயிலில் ஐ-பேடை தவறவிட்ட பயணிக்கு இன்ப அதிர்ச்சி தந்த தெற்கு ரயில்வே.. நெகிழ வைத்த சம்பவம்
மதுரை: திருநெல்வேலியைச் சேர்ந்த பயணி திருப்பதியில் இருந்து மதுரைக்கு ரயிலில் பயணித்த போது தவறவிட்ட விலை உயர்ந்த ஐ-பேடை, உதவி எண் 139 வாயிலாக மீட்டு அவரிடம் ஒப்படைத்துள்ளது தெற்கு ரயில்வே.. இதனால் மகிழ்ச்சி அடைந்த பயணி எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ரயிலில் நீங்கள் செல்லும் போது, அதுவும் விலை உயர்ந்த பொருட்களுடன் தனியாக ஸ்லீப்பரில செல்லும் போது தூங்கலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டே இருப்பீர்கள்.. காரணம் உங்கள் பொருட்களை ஸ்லீப்பர் ரயிலில் யாராவது திருடிவிட்டு அடுத்த ஸ்டேசனில் இறங்கிவிடுவார்களோ என்ற பயம் தான்.. பொதுவாக ஏசி அல்லாத ரயில்களில் பயணிக்கும் போது தான் இந்த மனநிலை உங்களுக்கு வரும்.. காரணம் யார் வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஏறுவார்கள்.. இறங்குவார்கள் என்பதால் இப்படி இருக்கும்..

இந்த சூழலில் ரயிலில் நீங்கள் தவறுதலாக உங்கள் செல்போனையோ அல்லது உங்கள் பொருட்களையோ ரயிலில் தவறவிட்டுவிட்டால், அதை மீட்பது அவ்வளவு எளிதானது அல்ல.. யாராவது எடுத்து சென்றுவிட்டால், எடுத்து சென்றது யார் என்பதை கண்டுபிடித்து வாங்குவது என்பது மிகவும் சவாலானது.
இந்நிலையில் ரயிலில் தவறவிட்ட ஐ-பேடை, ரயில்வே உதவி எண் 139 வாயிலாக தெற்கு ரயில்வே மீட்டு உரியவரிடம் ஒப்படைத்திருப்பதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.. இது குறித்து பயணியின் நன்றி கடிதத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தெற்கு ரயில்வே , வாடிக்கையாளருடைய இந்த கடிதம், மேலும் சிறப்பான சேவைக்கு வழி வகுக்கிறது என்று நெகழ்ச்சியுடன் கூறியுள்ளது,

என்ன நடந்தது? திருநெல்வேலியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில், திருப்பதியில் இருந்து மதுரை வரை பயணம் செய்திருக்கிறார். மதுரை ரயில் நிலையம் வந்ததும் இறங்கிய முத்துகிருஷ்ணன், தன்னுடைய விலை உயர்ந்த ஐ-பேடை பொருட்களை எடுத்து செல்லும் அவசரத்தில் ரயிலில் மறந்து வைத்துவிட்டு இறங்கி இருக்கிறார். இதனால், உடனடியாக ரயில்வே உதவி எண் 139-ஐ தொடர்பு கொண்டு தனது ஐ-பேடை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்தார்.
இந்த புகாரின் அடைப்படையில், ரயில்வே அதிகாரிகள் மானாமதுரை ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மானாமதுரை ரயில்வே பாதுகாப்பு படை காவல் அதிகாரிகள் உடனடியாக அந்த ஐ-பேடை கண்டுபிடித்து பாதுகாப்பாக எடுத்து வைத்துள்ளனர். மேலும், இது குறித்த தகவலை முத்துகிருஷ்ணனுக்கும் போனில் அவர்கள் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், முத்துகிருஷ்ணன் மானாமதுரை சென்று, அவரது ஐ-பேடை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றுள்ளார்.
இதனிடையே ரயில் பயணி முத்துகிருஷ்ணன், ரயில்வே நிர்வாகத்தை பாராட்டியும், மானாமதுரை ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு நன்றி தெரிவித்தும் கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள தெற்கு ரயில்வே, வாடிக்கையாளருடைய இந்த கருத்துக்களுடன் கூடிய கடிதம், எங்களை மேலும் சிறப்பான சேவை செய்ய வைக்க உதவுகிறது என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications